Saturday, December 10, 2011

ஆபிதீன் கதைகள் - அஸ்ரஃப் ஷிஹாப்தீன்

*

ஒரு நாள் நள்ளிரவு தாண்டி ஒரு மணியளவில் கணினியின் முன் அமர்ந்திருந்த நான் ஆபிதீ னின் சிறுகதையொன்றைப் படித்ததும் சத்தம் வராமல் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித் தேன்.

திண்ணை இணையத் தளத்;தில் இடம்பெற்றிருந்த அந்தக் கதையைப் படித்த போது எழுந்த அடக்க முடியாத சிரிப்பை நான் வாய் பொத்தாமல் வழமைபோல மனந் திறந்து வாய்விட்டுச் சத்தமாகச் சிரித்திருந்தால் எனது மனைவியும் பிள்ளைகளும் எனக்கு நட்டுக் கழன்று விட்ட தாக நினைத்திருப்பார்கள்.

ஆபிதீன் என்றொரு படைப்பாளியைப் பற்றி எனக்குச் சொன்னவர் யாரென்று ஞாபகம் இல் லை. எனக்குச் சொல்லப்பட்ட விதத்தில் அவரது எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதின் ஒரு மூலையில் கிடந்தது. சாருநிவேதிதா என்ற எழுத்தாளரின் படைப் புகள் பற்றிக் கவிஞர் அல் அஸ_மத் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த ஒரு சமயத்தில் ஆபிதீன் பற்றியும் அவர் சொன்னார். அப்போதுதான் ஆபிதீன், சாருநிவேதிதா சர்ச்சை பற்றிய குறிப்புக்களை நான் எப்போதோ இணையத்தில் ஏதோ ஒரு தளத்தில் படித்த ஞாபகம் வந்தது. எனவே ஆபிதீன் பற்றி எனக்கு யாரும் சொல்லவில்லை, நான் இணையத்தில் படித்த சாருநிவேதிதா, ஆபிதீன் குறித்த சர்ச்சை ஏற்படுத்திய தாக்கம்தான் ஆபிதீனைப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்திருந்தது என்ற முடிவுக்கு வந்தேன்.


ஆபிதீன்

ஆபிதீன் என்னளவில் ஒரு மகத்தான படைப்பாளி. ‘இடம்’, ‘உயிர்த்தலம்’ ஆகிய அவரது சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றையேனும் நான் படித்ததில்லை. ஒரு கவிஞனை நமக்குப் பிடித்த கவிஞனாகவும் ஒரு சிறுகதையாளரை நமக்குப் பிடித்த சிறுகதையாளராகவும் வரித்துக் கொள்ளஅக்கவிஞரின் எல்லாக் கவிதைகளையுமோ சிறுகதையாளரின் எல்லாக் கதைகளையுமோ படிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு கவிதை, ஒரு சிறுகதை போதுமானது. ‘அங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு’ என்ற நான் படித்த ஆபிதீனின் ஒரே ஒரு கதையுடன் அவர் எனக்குப் பிடித்த எழுத்தாளராகி விட்டார்.

ஆபிதீனின் கதைகளில் உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் நையாண்டியும். ஆனால் அதை வெறும் எள்ளலாக மட்டும் அவர் கதைகளில் பயன்படுத்தவில்லை என்பதுதான் அடிக்கோடிட்டுச் சொல்லப்பட வேண்டியது. வலிந்து புகுத்தப்படும் நகைச்சுவையோ நையாண்டியாகவோ அவை இருப்பதில்லை. தடவித் தடவி வந்து வலிக்க நோண்டிவிட்டு மீண்டும் தடவி விடுவது போன்ற ஒரு நுணுக்கம் அவற்றில் பரவியிருக்கும். கண்டிக்க வேண்டியதை, கேவலங்களை, அசிங்கங்களை, கேலிக்குரியவற்றை, சொல்ல வேண்டும் என்று நினைத்ததை அவர் இந்த நையாண்டியுடனும் நகைச்சுவையுடனும்தான் வெளிப்படுத்தி வருவார்.

ஆபிதீன் நாகூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நாகூரில் தர்ஹாவில் அடங்கப் பெற்றிருக்கும் இறை நேசர்களால் அந்த ஊருக்குத் தனி மவுசு உண்டு. வருடா வருடம் அங்கு நடக்கும் கந்தூரி வைபவமும் அக் கொண்டாட்டங்களையிட்டுக் கூடும் ஜனத்திரளும் எண்ணிலடங்காதது. இன்னும் அந்த அடக்கத்தலங்களைத் தரிசிக்கப் பல்வேறு நாடுகளிலுமிருந்து மக்கள் வருகை தருகிறார்கள். இந்த இறை நேசர் அடக்கத்தலங்கள் காரணமாகக் கூடும் மக்களை எதிர்பார்த்துத் தொழில் புரிவோர் அங்கு வாழ்கின்றனர். ஒரு வருடாந்தக் கொண்டாட்டத்தின் போது உறவினர் திறக்கும் ரெக்கோர்ட் பாரில் வேலை செய்திருக்கிறார் ஆபிதீன். இந்த வேளை கடைகளுக்கு வரி வசூலிக்க வரும் அரசு அதிகாரி பற்றி ‘கடை’ என்ற அவரது கதையில் இப்படிச் சொல்கிறார்:-

“இன்னும் ஓரிரு மாதங்கள் இந்தக் கடையில் இருக்கலாம். இதற்குள் வரி..வரி..என்று வரும் அரசு அதிகாரிகளைப் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். பரவாயில்லை. எனக்கு நன்றாகவே நடிக்க வருகிறது. ஒருநாள் பந்தலுக்கு வரி என்று ஒருவன் வந்தான். முப்பது ரூபாயாம் வருடத்திற்கு. 'ஹீ..ஹீ..ஹீ.. ' என்று இளித்துக் கொண்டே அடுத்த நாள் வரச் சொன்னேன். அடுத்த நாள் வரும்போது ஒரு பத்துப் பதினைத்து வருடம் தன் நாயகனைப் பிரிந்து, இப்போது அவனை வரவேற்கிற, ஒரு கற்புக்கரசி மார்க் மனைவியின் முகபாவம் எனக்கு இருந்தது. அன்று ஹீ..ஹீ..பலனளித்தது. அவன் வந்தவுடனேயே முதல் அடி. நன்னாரி சர்பத் இரண்டு! விழுந்து விட்டான். எல்லாக் கடைகளிலும் வசூலித்ததை விட பத்து ருபாய் குறைவாக வாங்கிக் கொண்டு போனான். அவனுக்கு சினிமா பாட்டெல்லாம் பிடிக்காதாம். பக்திப் பாட்டுகள்தானாம். 'திருமுருகன் தேனிசை ' ஒரு கேஸ்ஸட்டில் போட்டு வேண்டுமென்று சொல்லி விட்டுப் போனான். சேல்ஸ் டாக்ஸ் ஐயரும் என்னிடம் விழுந்தார். அவருக்கும் பக்திப் பாட்டுகள்தான் பிடிக்குமாம். அதென்னமோ அரசு அதிகாரிகள் பெரும்பாலோர் இப்படித்தான் பக்தியில் திளைக்கிறார்கள். கடவுள் வாழ்க !”

இங்கே ஆபிதீன் சொல்ல வருவது என்னவென்றால் - லஞ்சம் அது எந்த வடிவினதாகவும் இருக்கலாம் என்பதைத்தான். வரி பெற வரும் அதிகாரி அல்லது அரச ஊழியன் ஒரு நன்னாரி ஷர்பத்திலும் இடறி விழுகிறான், அந்த லஞ்சத்தைப் பக்திப் பாடல் வடிவத்திலும் பெற்றுக் கொள்கிறான் என்ற கேவலத்தைத்தான் சுட்டிக் காட்டுகிறார்.


1981ல் ஆபிதீன் எழுதிய கதை ‘குழந்தை’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. இந்தக் கதையில் ஒரு நீலக் குழந்தை பிறந்து சில நாட்களில் இறந்து விடுகிறது. ஆபிதீனின் ஒரு விடயத்தைச் சொல்ல வந்தாரென்றால் அந்த விடயம் பற்றி அவரது சிந்தனையில் ஊறும் அனைத்தையும் வார்த்தையில் வடித்து விடுவார். அவை சில வேளை கதைக்குச் சம்பந்தம் உடையதாகவும் இருக்கும். கதையோடு சம்பந்தம் அற்றதாகவும் இருக்கும். சம்பந்தம் அற்றதாக இருந்தாலும் கூட கதையின் ஓட்டமும் சுவையும் குன்றாது. இந்த இடத்தில் இது அவசியமில்லை என்று தோன்றினாலும் கூட அதை ஒதுக்கி விட ஆபிதீனின் எழுத்து நடை நம்மை அனுமதிக்காது.

குழந்தை என்ற கதையில் இளைஞன் ஒருவனின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இப்போதைக்குப் போல் மருத்துவ வசதிகள் அற்ற காலத்தில் மருத்துவிச்சி வீட்டுக்கு வந்து பிரசவம் பார்த்ததை நாம் அறிவோம். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு முஸ்லிம் கிராமத்து வீட்டுப் பிரசவம் எப்படியிருந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள நாம் ஆபிதீனிடம்தான் போக வேண்டியிருக்கிறது.

“மறப்பு உள்ளே பொம்பளைகள் ராஜ்ஜியமாக இருக்கும். சின்னப் பிள்ளைகள் மறப்பின் கீழுள்ள இடைவெளி மூலம் உள்ளே நடக்கும் ரகசியத்தை அறிய முயற்சிக்கும். தலையில் தட்டி அனுப்புவார்கள் பெண்கள். சில பெண்கள் ' உம்மாடி..பொறந்த எடத்தை பாக்கனும்டு ஆசைப்படுறான் பாவம்..டேய்...எல்லாமே ஹயாவுதாண்டா.. ' என்று வெடிப்பாய் பேசி அனுப்பும். பையன்கள் வெட்கத்துடன் ஓடி விடுவார்கள். நானும் சின்னப் பிள்ளையில் இப்படி மறப்பிற்குக் கீழ் பார்த்திருக்கிறேன். சுற்றிலும் பெண்கள் கூட்டம் உட்கார்ந்திருந்ததுதான் ஞாபகம் வருகிறது. அப்பொதெல்லாம் பிள்ளைகள் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வருவதாகத்தான் தீவிரமாய் நம்பிக்கை கொண்டிருந்தேன். நான்காவது படிக்கும்போது பக்கத்து பெஞ்ச் அப்துல்லா விஷயத்தைப் போட்டு உடைத்தான் என்றாலும் உம்மா வாப்பா விளையாட்டு என் வயது பெண்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போதிலும் எனக்கு இதில் முழு நம்பிக்கையில்லை. இந்த அப்துல்லா அவன் நண்பர்கள்தான் இப்படிச் சொல்வார்கள். வீட்டில் கேட்டால் வயிற்றிலிருந்துதான் வந்தது என்று சத்தியம் பண்ணிச் சொல்வார்கள். நிறைய புரியாமலிருந்தது.

P.U.C திருச்சியில் படிக்கும்போது நண்பனுடன் ஒரு படம் பார்த்தேன். அதில்தான் குழந்தை எப்படி வருகிறது என்று காண்பித்தார்கள். எனக்கு புரிந்து போயிற்று. ஆனால் முன்னாடியிருந்த ஒரு ஆர்வம் சப்பென்று போனது. வீட்டில் 'புள்ளய எவ்வளவு செரமப்பட்டு பெக்குறொம் தெரியுமா ? ' மாமாவிடம் மாமி கொஞ்சலாய் கேட்கும்போது 'ஆமா..தொட்டித் துணியை நல்லா கையால இறுக்கிப் புடிச்சிக்கிட்டு 'யா முஹய்யத்தீன் 'னு மூணு தடவை கத்தி ரெண்டு முக்கு முக்குறீங்க. பெரீய்ய இதா இது ?! ' என்று நக்கலான குரலில் சொல்வார். பொம்பளைகள் சிரிப்பார்கள். ஒரு தரம் தம்பி, வீட்டில் Decky; Donna SummerI போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். அவள் செக்ஸியாக முனகுவதை குஷியாகக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு 'என்னடாது புள்ள பெக்குறவ கத்துறமாதிரி கத்துறா.. நல்லாத்தான் பாட்டு கேக்குறே போ ' என்ற லாத்தாவின் குரல் சிரிப்பைக் கொடுத்தது.

ஆபிதீன் கதைகளில் அவர் எதையும் நேரடியாகப் பேசுகிற பண்பு உண்டு. பாலியல் விடயங்களையும் சிலவேளை நேரடியாகவும் சில வேளை இரட்டை அர்த்தத்திலும் பயன்படுத்துவார். அவரது கதைகளை வாசித்துச் செல்லும் போது முகத்தைச் சுளிக்க வைப்பதற்குப் பதிலாகப் பெருஞ் சிரிப்பைத்தான் அவை ஏற்படுத்துகின்றன. சமூகக் கழிசடைத்தனங்களை நேரடியாக அல்லது வேறொரு வகையில் அவர் கிண்டலடிப்பது போல்தான் இதை என்னால் எடுத்துக் கொள்ள முடிகிறது. இந்த விடயத்தில் உடன்பட முடியாதவர்கள் இருக்கக் கூடும். கருத்துக்களில் ஏற்றுக் கொள்ளும் கருத்துக்களும் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களும் ஆளுக்காள் வேறுபடக் கூடும்.

கதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆணியடித்துச் சட்டகம் செய்து வைத்திருக்கின்ற சூழல் ஆபிதீன் கதைகளை சிறுகதைகளாக ஏற்றுக் கொள்ள மறுக்கும். ஒரு கதையைச் சொல்லத் தொடங்கி எங்கெங்கெல்லாமோ சென்று திரும்புவார் ஆபிதீன். அவரது ‘உயிர்த்தலம்’ சிறுகதைத் தொகுப்புக்கு கோ.ராஜாராம் எழுதியுள்ள பதிப்புரையில்,

"ஆபிதீன் கதைகளைப் படிக்கையில் இரண்டு உணர்வுகள் எழுவதைத் தவிர்க்க முடியாது. ஒன்று : அவை சம்பிரதாயமான கதைகள் அல்ல. கதைகளின் இலக்கணத்தைப் பொருத்திப் பார்த்தால் அவை கதைகளே இல்லை என்று கூடச் சொல்லிவிடலாம். இன்னொன்று அபார நகைச்சுவை உணர்வு. சிறுகதைகளின் இலக்கணம், எடுப்பு, தொடுப்பு, சிக்கல், சிக்கலின் வளர்ச்சி, முடிவு என்று எந்தப் படிநிலையும் இல்லாமல், சரேர் என தொடங்கி, மனம் போன போக்கில், ஆனால் ஒரு திட்டத்துடன் நகர்ந்து மையப்புள்ளியை உருவாக்கிய நிமிடமே அதைச் சிதைத்து, மறு மையம் நோக்கிப் பாய்தல் என்று எல்லா இலக்கணங்களையும் மீறிய ஒர் அமைப்பு அவருடைய கதைகளில் காணக் கிடைக்கின்றது. அதனாலேயே தமிழின் கதைசொல்லலில் ஒரு புது அழகியலை அவை உருவாக்குகின்றன. சுவாரஸ்யம் இலக்கியச் சிறப்பிற்கு ஒவ்வாது என்ற அழுகுணி இலக்கணத்தையும் இவை மறுக்கின்றன. அவருடைய நகைச்சுவை அவருடைய தனித்த பார்வைக்குச் சான்று. நகைச்சுவை மூலம் சுற்றிலும் உள்ள அவலங்களையும், ஒவ்வாமைகளையும், முரண்பாடுகளையும் அவர் சித்தரிக்கிறார் என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம்.

ஆனால் சிரிப்பு எழுந்த மறு வினாடியே மனதைப் பிசைகிற ஒரு துயரம் பெருக்கெடுக்கும் தருணங்கள் அவர் கதைகளில் உள்ளன. பிழைப்பிற்காக நாடு விட்டு நாடு வந்து, மனைவி மக்களைப் பிரிந்து உழலும் மனிதர்கள் சித்தரிக்கப் படுகிறார்கள். உன்னதமும் மலினமும் ஒன்றேபோல் பிணைந்து கிடக்கிற மனிதக் கூட்டம் ஏதோ கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளால் பிணைக்கப் பட்டு திணறும் உணர்வை இந்தக் கதைகள் ஏற்படுத்துகின்றன" என்கிறார்.

ஆபிதீனின் கதைகளுக்குள் பல்வேறு சம்பவங்களையும் கதைகளையும் சேர்த்துச் சொல்லிக் கொண்டு செல்வார். அவை கதைக்கு அல்லது கதையில் வரும் பாத்திரத்துக்கு அல்லது பாத்திரத்தோடு சம்பந்தப்பட்ட விடயம் ஒன்றைப்பற்றிச் சொல்வதற்கு அல்லது துணைப்பாத்திரம் ஒன்று பற்றி விவரிப்பதற்கு அல்லது துணைப்பாத்திரத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு விடயம் பற்றிச் சொல்வதற்கென்று கதை விரிவுபட்டுக் கொண்டே செல்லும். அவ்வாறான சில சுவாரஸ்யமான இடங்களைச் சுட்டிக் காட்ட வேண்டும்.

‘வலை’ என்ற கதையில் வரும் சம்பவங்கள் இவை.

“மெய்தீன் மாமா பழக்கமானது நண்பன் ரஃபீக்கை அவர் காப்பாற்றியதில் வந்த நன்றியால்தான் என்று கூற வேண்டும். கொமெய்னி ஃபத்வா கொடுத்த ஒரு இந்திய எழுத்தாளனை , 'அவன் சில நல்ல கட்டுரைகளும் எழுதியிருக்கிறான்; ஒரு கருத்தை எதிர்க்க கொலைவாளினை எடுப்பது தவறு' என்று உலகத்தைப் புரியாமல் மேதாவித்தனமாக அவன் ஒரு கடிதம் நுஒpசநளள பத்திரிகைக்கு அனுப்ப, காத்துக் கொண்டிருந்த அவர்களும் துரிதமாக பிரசுரிக்க , காம்பூரிலிருந்து ஒருவர் வாளினை எடுத்துக் கொண்டு வந்து விட்டார் நாகூருக்கு..

ரஃபீக்கைப் பற்றி விசாரிக்கத்தான்..

அப்போதுதான் மாமா அவருக்கு ஒரு கதை(?)யைச் சொல்லி சமாதானப் படுத்தி விட்டிருக்கிறார் சமாளித்து. என்ன கதை ? இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது ஒருவரை ஒருவர் வெட்டிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். சொர்க்கத்திற்கு வழி சொல்லும் மதங்கள்..

ஒரு முஸ்லீம் இளைஞனிடம் ஒரு 'காஃபிர்' மாட்டிக் கொண்டு விட்டான் வசமாக. தன் குடும்பத்தாரை ஈவு இரக்கமில்லாமல் கொன்று தீர்த்த காஃபிர்களுள் ஒருவன் என்ற வெறி இவனுக்கு...

'போலோ கலிமா..!' - முஸ்லீம் இளைஞன் , வெறியோடு கத்திக் கொண்டு உருவிய வாளுடன் விரட்டுகிறான். வேறு வழியில்லை. சரியாக ஒரு மூலையில் மாட்டிக் கொண்டாகி விட்டது..தன் கடவுள்கள் யாரும் இப்போது உதவிக்கு வரப் போவதில்லை..

'சரி சொல்கிறேன்..நீ சொன்னபடியே செய்கிறேன்..சொல். எப்படிச் சொல்ல வேண்டும் கலிமா?'

அப்போதுதான் 'கலிமா' என்றால் என்னவென்று தனக்கே தெரியாது என்று முஸ்லீம் இளைஞன் உணர்ந்தானாம்! 'கலிமா' என்பது ஒரு கைலி பிராண்ட் அல்ல. 'லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' எனும் இஸ்லாத்தின் மூல மந்திரம். ”

முஸ்லிம் சமூகத்தில் சிலரது நிலை இதுதான். தான் யார்? தனது மார்க்கம் என்ன? எதை எப்படி அணுகச் சொல்லியிருக்கிறது? எது கட்டாயம்? எதைச் செய்வது சிறப்பு? பல்லின தேசத்தில் வாழும் ஒரு முஸ்லிம் சக இனத்தாரோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்கிற எந்தத் தெளிவும் இல்லாமல் வாழும் கேடு கெட்ட நிலை. இந்த நிலையைச் சில இயக்கங்கள் பணமாக்குகின்றன. அரசியல் வாக்குகளாக மாற்றுகிறது. சிலர்வாழ்கிறார்கள். சிலர் வீழ்கிறார்கள். இவ்வாறான அவலங்களை மறைமுகமாகத் தனது கதைகளில் சொல்லிச் செல்வதால் ஆபிதீன் எழுத்துக்களை நான் கொண்டாடுகிறேன்.

‘மூடல்’ என்று ஒரு கதை. அந்தக் கதையில் ஆபிதீன் எழுதிச் செல்வதை அவதானியுங்கள்.

கல்யாணமானாலும் 'ஒத்தத் துப்பட்டி 'யோடு பெண்கள் போக முடியாது. எந்தப் பெண்ணும் ஒரு பெண் துணையோடுதான் போவார்கள். அப்படிப் பார்த்தால் நாலு பெண்டாட்டி கட்டியவரின் பெண்கள் , எட்டு பெண்களாக போக வேண்டி வருமோ ? கணக்கெடுப்பது சிரமம். அதெல்லாம் தெம்புள்ள வம்பர்களின் சமாச்சாரம். நமக்கெதற்கு ? இங்கே ஒன்றைத் தணிப்பதற்குள்ளேயே உள்ளெல்லாம் உதறி ஒடுங்குகிறது. ஸ்ஸ்ஸ்....!

தனியாக நாங்கள் அப்படி வருவதை தெருவில் பார்த்தவர்கள் உம்மாவிடம் வத்தி வைக்கப் போய் பொசுங்கிப்போனதுதான் மிச்சம். நானே எதிர்பார்க்கவில்லை! உம்மா ரொம்பவும்தான் மாறிவிட்டார்கள்!

'அவன் பொண்டாட்டியோடதான் வர்றான். வரட்டுமே..நாங்களுவதான் விதியத்துப் போய் வூட்டுலேயே கெடக்குறோம். எங்க மாப்புள்ளைமார்க்கும் தஹிரியம் இல்லை.. '

ஆஹா! இனி அடுத்த முயற்சிதான். என் நண்பரொருவன் ஒரு பிராமணைப்பெண்ணை காதலித்து அவளை முஸ்லீமாக மாற்றி கல்யாணம் செய்தும் அவளை துப்பட்டி இல்லாமலேயே ஊரில் வலம் வரச் செய்தான். இதை மட்டும் ஊர் சகித்துக் கொண்டதற்கு நான்கு காரணங்கள்:

1. அந்தப் பெண் பேராசிரியர். (இஸ்லாம் பத்தி புத்தகம் எழுதுங்கம்மா..!)

2. ஒரு காஃபிரை இஸ்லாத்திற்கு கொண்டு வந்தான். (ராமகோபலனுக்கு செம அடி!)

3. அந்த அம்மா இன்னும் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளவில்லை (அல்லா சீக்கிரம் மாத்திடுவான்!)

4. நண்பன் வற்றவற்றக் குறையாத பணக்காரன். அதாவது தர்கா டிரஸ்டி!

இந்த நான்குக்கும் எனக்கும் சம்பந்தமில்லையானாலும் வேதாளத்தையே இறக்கியே தீருவேன். அப்போதுதான் நான் ஆணாதிக்கவாதியில்லை. 'திண்ணியம் ' ஒதுக்கி பெண்ணியம் பேசும் புண்ணியரும் பாராட்டுவர்.

'அஸ்மா, எப்ப இதையிலாம் தூக்கியெறியப்போறே ? '

அஸ்மா என்னை தீர்க்கமாகப் பார்த்தாள்.

'நாங்கள்லாம் உசுரோட இக்கெ வாணாம் ? ' என்றாள்

' ? ? ? '

'நம்ம பாளையம் , மூஞ்சிலெ 'ஆசிட் ' ஊத்துனா என்னாவுறதுண்டு கேட்டேன் '

'!!! '

'ஆத்திர அவசரத்துக்கு ஒடனே வரமுடியாதே ஒங்களாலே மச்சான் அப்ப..! '
'அதனாலெ ? '

'அதனாலெ அல்ல, எதனாலேயும் ஊரோட ஒத்துத்தான் போவனும்மா.. '

அந்த பதில் என்னைப் பொசுக்கியது. இரண்டு வருடத்தில் ஒருமாதம் ஊரில் இருக்கிறவன் ஊராரை மதிக்காமலிருப்பது முட்டாள்தனம். இல்லையேல் கலவரங்களின்போது காப்பாற்ற மாட்டார்கள்.

முஸ்லிம் கிராமங்களுக்கென சில சட்ட திட்டங்களை ஊராரே உருவாக்கி வைத்திருந்த ஒரு காலகட்டம் இருந்தது. திருமணமான ஒ பெண் கூட மற்றொரு துணையுடன் செல்லவேண்டும் என்கிற நிலையை ஆபிதீன் சுட்டிக் காட்டுகிறார். இலங்கையில் இவ்வாறான நிலை இருபது அல்லது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே மாறிவிட்டது. இந்தியாவில் கூட இந்நிலை இப்போது இல்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் அந்தச் சூழ்நிலையை ஆபிதீன் அழகாக எடுத்துக் காட்டுகிறார். அதை மீறவும் முயற்சிக்கிறார்.

இதில் அவதானிக்கப்பட வேண்டிய இன்னொரு விடயம், பணம் உள்ளவன், செல்வாக்குள்ளவன் - பள்ளிவாசல் தர்மகர்த்தாவாக அவன் இருந்த போதும் அவனால் இஸ்லாமிய மார்க்கச் சட்டங்களை மிக இலகுவாக மீற முடிகிறது என்பதைத்தான். நீதி சொல்பவர்கள், பத்வா வழங்குபவர்கள் எல்லோரும் அப்போது கவட்டுக்குள் கையை வைத்துக் கொண்டு தூங்கி விடுவார்கள். பெண்கள் தனியே வந்தால் அசிட் அடிக்குமாறு இஸ்லாம் அதிகாரம் கொடுத்து விட்டதாகத் தாங்பளாகவே நினைத்துச் செயல்படுபவர்கள் எல்லோரும் தர்மகர்த்தா இஸ்லாத்தை மீறினாலும் கண்டு கொள்ளமாட்டார்கள். இதைத்தான் இன்னொரு வார்த்தையில் இங்கே ஆபிதீன் சுட்டிக் காட்டுகிறார்.

குறைகளை நையாண்டி பண்ணும் அதே சமயம் இஸ்லாம் மார்க்கத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய அம்சங்களையும் வரலாற்றுத் துணுக்குகளையும் கூடத் திணிக்காமல், பிரச்சார நெடியில்லாமல் ஆங்காங்கே அவர் இயல்பாகக் கைள்கிறார்.

‘அமானுதம்’ என்ற கதையில் அவர் சொல்லும் சம்பவம் இது: -

மக்கா வெற்றியின் போது நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவில் நுழைவதற்கு சாவி கேட்கிறார்கள். அது உஸ்மான் பின் தல்ஹா என்பவரிடம் இருக்கிறது. கஃபாவின் பாதுகாப்பாளர் (சதானா) அப்போது இஸ்லாமியரல்ல. தயக்கத்துடன் சாவியைக் கொடுக்கிறார் உஸ்மான். உள்ளே சென்று , பின் கஃபாவை விட்டு வெளியில் வந்ததும் அதைப் பூட்டி , மறக்காமல் சாவியை உஸ்மானிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு '(சாவி) ஊழுழிகாலமட்டும் உம்மிடமும் உம் சந்ததியினரிடமுமே இருந்து வரட்டும் ' என்று சொல்கிறார்கள் உத்தமத் திருநபி. அமானுதம் சம்பந்தமான முக்கியமான இறைவசனம் பிறந்த இடமும் இதுதான். நாயகத்தின் பெருந்தன்மையையும், கனிவையும், அமானுதப் பொருளில் அவர்களுக்கிருந்த எச்சரிக்கையையும் பார்த்து நெகிழ்ந்து , சாந்தி மார்க்கத்திடம் சரணடைந்து விடுகிறார் உஸ்மான். கஃபாவின் சாவி இன்றுவரை அவருடைய சந்ததியிடம்தான் இருக்கிறது.

ஆபிதீன் எழுத்தில் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யம் தூக்கலாக இருக்கும். ஒரு கதைக்குள் ஒரு நூறு விடயங்களைச் செய்திகளை, கதைகளை, தகவல்களைச் சொல்லிக் கொண்டே செல்வது அவரது எழுத்தின் இயல்பாகி விட்டிருக்கிறது. ‘நாங்கோரி’ உறுப்பினர் என்று ஒரு கதை. கல்லூரியில் விழாவில் பாடும் கதை நாயகனுக்கு வரும் அநாமதேய நக்கல் விமர்சனச் சீட்டுப் பற்றி ஆரம்பமாகி இணையத்தளங்களில் நடக்கும் கூத்துக்களைக் கிண்டலடித்துக் கொண்டு நகரும் அந்தக் கதையில் வருகிறது இந்தச் சம்பவம்.

“அட, ஊரைப் பற்றி எழுத வேண்டாம், உலகத்தில் எத்தனையோ அயோக்கியத்தனங்கள் நடக்கின்றன... முக்கியமாக ஈராக் விவகாரம்... விபரமாக எழுதலாம் இல்லையா? வீராவேசமாக நான் கூட - இரண்டாம் வளைகுடாப் போர் நிகழப் போவதற்கு முதல்நாள் - துணிச்சலான துபாய் அரசு காட்டிய ஒரு நிமிடக் குறும்படம் பற்றி எழுதவில்லையா - அந்த 'புத்தகப் புல்லு' இணையக் குழுமத்தில்?

இரண்டு புத்திசாலிக் குரங்குகள் சேர்ந்து களிமண்ணால் ஒரு சிலை வடிக்கின்றன. வசனமெல்லாம் இல்லை. வேடிக்கையான பின்னணி இசை மட்டும்தான். சிலையின் பின்பக்கம் மட்டும்தான் மங்கலாக நமக்குத் தெரிகிறது. தட்டித் தட்டி ஒருமாதிரியாக சிலை உருவாகி விட்டது. 'டக்'கென்று சிலையின் முன்பக்கம் தெரிகிறது இப்போது நமக்கு.

வடிக்கப்பட்டதும் ஒரு குரங்கு.

அடுத்த நொடியில் செய்திநேரம் ஆரம்பமானது. புஷ்ஷ¥ம், பிளேரும் அறிக்கை விடுக்கிறார்கள் - ஈராக்கில் ஜனநாயகத்தைக் கொண்டுவர போர் தொடுப்பதாக.

அசந்து விட்ட அத்தனை உறுப்பினர்களில் ஒரே ஒருவர் மட்டும் உடனே எழுதினார் : 'அந்த குறும்படத்தில் அருமையாக நீங்கள் நடித்திருந்தீர்கள்'

உலகத்தில் பொதுவாக படித்தோர், படிக்காதோரை இணைக்கும் பாலங்கள் சில உள்ளன. அவற்றுள் அரசியல், சினிமா, விளையாட்டு, நகைச் சுவை ஆகியன அடங்கும். இவற்றை எல்லாத் திறத்தவரும் சமமாக அமர்ந்து பேசுகிறார்கள். கருத்துப் பரிமாறிக் கொள்கிறார்கள். இவற்றில் சகலரையும் கவர்வது நகைச்சுவை மட்டும்தான். நகைச் சுவை சொல்வதற்கு எல்லோருக்கும் வாலாயப்படாது. அதைச் சொல்வதற்கு ஒரு முறை உண்டு. எப்படிச் சொல்ல வேண்டும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். நகைச் சுவையொன்றைச் சொல்லுவதாக இருந்தால் அதற்கு ‘டைமிங்’ தேவை. ‘டைமிங்’ தவறினால் அது எடுபடாது. நடிகர்களில் மிகச் சிறந்த நடிகர்கள் நகைச்சுவை நடிகர்கள்தாம். நகைச் சுவை எழுதுவதாக இருந்தால் அதற்குரிய சொற்கள் தேவை. அதைச் சொலவதற்கான வசன அமைப்புத் தேவை. நகைச் சுவையொன்றுக்கூடாக ஒரு தகவலை, செய்தியை, ஒரு கருத்தை இலகுவாக மக்கள்மயப்படுத்த முடியும்.

எனவே, சமுதாயக் கேவலங்களையும், பிறழ் நடத்தைகளையும், தப்புத் தாளங்களையும் கண்டிப்பதற்கும் ஒரு நல்ல கருத்தை முன்வைப்பதற்கும் நகைச்சுவையையும் சுவாரஸ்யம் மிகுந்த எழுத்து நடையையும் கைக் கொள்வதில் தப்பே கிடையாது என்பது எனது கருத்து. சுவாரஸ்ய எழுத்து நடை வாசகனைத் தன்னுடனேயே அழைத்துச் செல்ல வல்லது. அவ்வாறான எழுத்து நடை சென்று சேரும் களங்களும் பரந்தவையாகவே இருக்கும். இப்படியிருந்தால்தான் சிறுகதை என்று நாம் போட்டு வைத்திருக்கும் சட்டகங்களுக்கு அடங்காமல் சிரித்துக் கொண்டே அந்த எல்லைகளை ஆபிதீனின் எழுத்துக்கள் தாண்டிப் போகின்றன. அதே போல்தான் அவரது கதைகளின் வாக்கிய அமைப்பும். இலக்கணங்களைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. ஒரு சொல்லைக் கூட ஒரு வசனமாக ஆனால் அர்த்தம் பொதிந்ததாக அவரால் பயன்படுத்த முடிகிறது.

ஆபிதீன் நகைச்சுவையை வேண்டுமென்றே புகுத்தும் ஒரு படைப்பாளி அல்லர். அது அவருக்கு இரத்தம் ஊறுவது போல எச்சில் ஊறுவது போல இயல்பாகச் சுரக்கிறது. மூடல் என்ற கதையில் இப்படி வருகிறது.

சென்னையில் தங்கி கைலி கம்பெனிகளுக்கு Tricolor லேபிள் டிசைன் போட்டுக் கொண்டிருந்த காலத்தில் முதலாளி ஷேக் காக்காதான் அடிக்கடி சொல்வார் என்னிடம் : 'தம்பிவாப்பா, உங்க பல்லை கொஞ்சம் சரி பண்ணுங்களேன்..

'பளீர் ' வெள்ளையுடன் பளபளக்கும் அவர் பல்லைப் பார்த்து நான் சொல்வேன் : 'சும்மா இருங்க காக்கா.. 'பல்லாலெயா வரையிறேன் நான் ? '

'அதுக்கில்லெ...பாக்க அலஹா இரிக்க வாணாமா ? கம்பி கட்டுனா கொஞ்ச நாள்லெ சரியாயிடும்லெ ? '

டிசைனுக்கு காசு வராது. டிசைன் செய்ய Rotring Pen வராது. ஆலோசனை மட்டும் அள்ள அள்ள வரும்.

அந்த காக்கா ஒருமுறை ஜியாரத்திற்காக என் ஊருக்கு போய் அப்படியே என் வீட்டுக்கும் போய் மூன்று ரூபாய் பத்து காசு கொடுத்துவிட்டு வந்ததும் ஏனோ என் பல்லைப் பற்றி பேச்சே எடுக்கவில்லை. எனக்கே எப்படியோதான் இருந்தது. ஈறுகளும் சேர்த்துத் தெரியுமாறு நான் சிரித்துக் காட்டியும் 'உம் 'மென்றே இருந்தார். நானாக 'கம்பி.. ' என்று துவக்கினால் 'சூ, அதை வுடுங்க தம்பி.. டிசைன் பத்திப் பேசுவோம். அந்த.. மஞ்சள்லெ நீலம் உக்காரும்போது... ' என்று தவிர்த்தார்.

வெட்கப்படாமல் ஒருநாள் கேட்டே விட்டேன் அவரிடம். 'ஏன் காக்கா இப்பல்லாம் பல்லுகம்பி பத்தி எதையுமே பேசமாட்டேங்கிறீங்க ? '

தன் பல்செட்டைக் கழட்டிவிட்டுச் சொன்னார் : ' ஒரு ஆளுண்டா பரவாயில்லே..ஒங்க குடும்பமே அப்படித்தான் இக்கிது! என்னா செய்யிறது ? அல்லாட படைப்புண்டு அப்படியே அக்குசெப்டு பண்ணிக்க வேண்டியதுதான்! '

ஆபிதீன் கதைகள் முழுவதுமே வெறும் நகைச்சுவைகளால் நிறைந்தவை அல்ல. ஆவை நகைச் சுவையூடான ஆழ்ந்த சிந்தனைக்குரிய விடயங்களைப் பேசுகின்றன. நகைச்சுவையே கலந்திருந்தாலும் உள்ளத்தைத் தொடுமாறும் கலங்கடிக்குமாறும் எழுதவும் அவரால் முடியும் என்பது ‘குழந்தை’ கதையில் வெளிப்படுகிறது. இறந்த நீலக் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்படும் காட்சியை அவர் சொல்லும் போது உயிர் உருகி விடுகிறது: -

“குழந்தைக்க்காக வெட்டிய குழி வடக்கு தெற்காக இருந்தது. இடம் ஞாபகம் வைப்பதற்கு வசதியாக (ஹபரடி ஃபாத்திஹாவுக்கு) பக்கத்தில் ஒரு பெரிய வேப்பமரம் இருந்தது. மோதினார் ஃபாத்திஹா ஓதியபிறகு, சின்னாப்பா குழியில் நின்று கொண்டு பிள்ளையை வாங்கி 'பிஸ்மில்லாஹி அலாமில்லதி ரசூலில்லாஹி ' என்று சொல்லியவண்ணம் குழியில் வைத்தார். தலை கிப்லா பக்கமாய் சாய்ந்திருந்தது. ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சம் மண் எடுத்துத் தந்தார்கள். அதை வாங்கிக் குழந்தையின் வலது கன்னத்தின் அடியில் வைத்தார் சின்னாப்பா. நானும் மண் கொடுத்தேன். முன்னொரு தடவை சின்னப்பட்டனார் சக்கரப்பாவின் மௌத்தின்போது - அப்போது நான் சின்னப்பிள்ளை - மண்ணை குழியில் நிற்பவரிடம் (அப்போதும் சின்னப்பாதான் நின்றிருந்தார் ) கொடுப்பதற்கு பதிலாக உடல் மேலேயே கொட்டியது ஞாபகம் வந்தது. நின்றவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். 'பரவாயில்லெ..சின்னப்பையன்தானே ' என்று சின்னாப்பா சொன்னார் அப்போது. எல்லோரும் மண் எடுத்துக் கொடுத்து முடித்து சின்னாப்பா அதை வாங்கி சற்று உருண்டையாக்கி குழந்தையின் வலது கன்னத்தின் அடியில் வைத்து விட்டு நிமிர்ந்தபோது ஒரு சின்ன கை 'ம்..இந்தாங்க சின்னாப்பா ' என்று நீண்டது. கடைசித் தம்பி ஹாஜா. அழுது கொண்டே கொடுத்தான். அதையும் வாங்கி வைத்தார் சின்னாப்பா. கடைசியாய் குழந்தையின் முகத்தைப் பார்த்தேன். பிறந்த மூன்று நாளிலேயே ஒரு மிகப்பெரிய புதிரின் விடையைக் கண்டுவிட்ட சிரிப்பு உறைந்து போயிருந்தது முகத்தில் அழகாய்..ஹமீது என்னை தட்டி இழுத்து அணைத்துக் கொண்டான்.”

ஆபிதீனின் எழுத்தில் மிக முக்கியமான சிறப்பு தன்னையும் தன் சார்ந்தோரையும் தன் சமூகத்தையும் தன்னோடு பழகும் பிற சமூகத்தவரையும் தொழில் ரீதியாகத் தொடர்புள்ளோரையும் சுற்றியே அவரது கதைகள் அமைவதுதான். அதிலுள்ள மேலதிகச் சிறப்பு என்னவெனில் யாருக்காகவும் தனது பாரம்பரிய பழக்க வழக்கச் சொற்களை நவீன மயப்படுத்தவோ நாகரீக வார்த்தைகளில் சொல்லவோ அவர் ஒரு போதும் முற்படுவதில்லை. கிழக்கில் ஒரு முஸ்லிம் கிராமத்தில் பிறந்த நான் இவரது கதைக@டே எனது கடந்த காலத்தையும் எனது மூதாதையரையும் சந்திக்கிறேன். அவர்கள் பயன்படுத்திய அறபுச் சொற்களை ஆபிதீன் எனக்கு மீட்டுத் தருகிறார். இந்தியாவும் இலங்கையும் வேறு தேசங்களாக இருந்த போதும் முஸ்லிம்கள் என்ற வகையில் பயன்படுத்தப்படும் சொற்களும் செயற்பாடுகளும் பெரும்பாலும் ஒரு நேர் கோட்டிலேயே பயணித்திருக்கின்றன என்பதை நான் காண்கிறேன்.

முஸ்லிம் சமுதாயத்துடன் இணைந்து வாழ்ந்த தமிழ் சமுகத்துக்கும் முஸ்லிம்கள் பயன்படுத்தும் அரபுச் சொற்களில் பரிச்சயம் இருந்ததுண்டு. இன்றும் கூட பல தமிழ் சகோதரர்கள் இச்சொற்களில் பரிச்சயம் உடையவர்களாகவும் முஸ்லிம்களுடன் உரையாடும் போது அதே சொற்களைப் பயன்படுத்துபவர்களாகவும் உள்ளனர். மௌத், கபுர், பாங்கு, மோதினார், ஆலிம், மௌலவி, ஜனாஸா, பர்தா போன்ற சொற்களை உதாரணமாகச் சொல்ல முடியும்.



தலைமை வகித்த திருமதி வசந்தி தயாபரன் மற்றும் நான்
உரை முடிவடைந்ததும் கருத்தத் தெரிவிக்கும் சட்டத்தரணி ராஜகுலேந்திரா

ஆபிதீன் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார் என்று நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அவர் எழுதியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள 25 கதைகளில் 14 கதைகளை மாத்திரமே நம்மால் படிக்கக் கூடியதாகப் பதிவிடப்பட்டிருக்கிறது.

ஆபிதீனை அவரது வலைத்தளம் மூலமாக நாம் படிக்க முடியும். கதைகள் மட்டுமன்றி ஏனைய நூல்கள் பற்றிய குறிப்புக்கள், மற்றைய எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பற்றிய குறிப்புகள், இசை, ஞானிகள், இஸ்லாம் குறித்த அம்சங்கள், சர்வதேச விவகாரம், கவிதை என்று பல்வேறு விடயங்கள் குறித்து அவரது எழுத்துக்களைப் படிக்க முடிவதுடன் அவரது இணையத் தளமூடாக பல எழுத்தாளர்களைத் தொடர்பு கொள்ளவும் அவர்களைப் படிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளார்.

http://abedheen.wordpress.com/

சின்னச் சின்ன ஆசைகள் எல்லோருக்கும் உண்டு. ஆபிதீன் காக்காவின் வீட்டில் அவரோடு சேர்ந்திருந்து சிரித்துச் சிரித்து விருந்துண்டு மகிழும் ஓர் ஆசை என் மனதில் உள்ளது. என்றாவது ஒரு நாள் அது நிறைவேறக் கூடும்.
------------------------------------------------------------------------------------------------------

(கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இலக்கியக் களம் நிகழ்ச்சியில் 02.12.2011 அன்று ஆற்றிய உரை)

Monday, December 05, 2011

க. நா. சு. - க் கு 'நூ ற் றா ண் டு வி ழா'

*

எனக்கு மாமனாராகவும் இருந்த க.நா.சு.
---------------------------------------

-பாரதிமணி


ஐம்பதுகளில் நான் கல்கண்டு, கண்ணன், ஜில்ஜில், அணில் போன்ற சிறுவர் பத்திரிகைகள் படித்துக்கொண்டிருந்தபோது, எங்களூர் பார்வதிபுரத்தில் நடராஜன் என்ற அறிவுஜீவி-- ஹிந்தியில் Ghar Jamai என்று அறியப்படும், பணக்கார மாமனாருக்கு ‘வாழ்க்கைப்பட்ட’ வீட்டோடு மாப்பிள்ளையாக --இருந்தார் .ஊரே அவரை ‘மாப்பிள்ளை’ யென்றுதான் கூப்பிடும். எங்களுக்கு அவர் ‘மாப்ளைமாமா’. எதைப் பற்றியும் விரிவாக, மிகவும் சுவாரசியமாக, பேசத்தெரிந்தவர். அவருக்கு தேவையெல்லாம் லீவு நாட்களில் எங்களைப் போன்ற பதின்மவயது ‘ஆடியன்ஸ்’ தான். மணிக்கணக்கில் வாயைப்பிளந்து கேட்டுக்
கொண்டிருப்போம். பலநாட்கள் என் அம்மா திண்ணைக்கு வந்து, அவரிடம் ‘ஓய்! மணிரெ ண்டாகப் போறது. இன்னும் குளிக்காமெ, சாப்பிடாமெ, உம்ம பேச்சைக் கேட்டுண்டு ஒக்காந்திருக்கான். எல்லாம் ஆறிப்போயாச்சு. அப்பறமா சாப்டுட்டு பேசலாமே!’ என்று எங்கள் ‘இலக்கிய விசாரத்துக்கு’ ஒருமுற்றுப் புள்ளிவைப்பாள்!

நான் தில்லி வந்து, பிறகு லீவில் ஊருக்குப் போயிருந்தபோது, தில்லியில் நான் கேட்ட படேகுலாம் அலிகான், பேகம் அக்தர் இசை பற்றியும், பாலசரஸ்வதி அபிநயம்குறித்தும் நான் சொல்ல, அவர் கேட்டுக் கொண்டிருப்பார். அவரிடம்தான் முதன் முதலாக சாணிப் பேப்பரில் அச்சிடப்பட்ட எழுத்து பத்திரிகையைப் பார்த்தேன். பழைய பிரதிகளை பைண்ட் போட்டு வைத்திருப்பார். தான் ஒருவரி கூடஎழுதாமல், நல்ல எழுத்தை ரசிக்கத் தெரிந்த ‘இலக்கியவாதி’! இளவயதிலேயே நல்ல எழுத்தை இனம் கண்டு, தேடித் தேடி வாசிக்கும் பழக்கத்தை எனக்குள் வித்திட்ட ஆசான். விகடன், கல்கி கதைகளைப் படிக்கும் என்னிடம், கிருஷ்ணன் நம்பியின் கதை வந்திருக்கும் சரஸ்வதியைக் கொடுத்து படிக்கச் சொல்லுவார். பாவம்.. அறுபது வருடங்கள் கழித்து எழுத ஆரம்பித்த ஒரு ‘நல்ல எழுத்தாளரை’ப் படிக்காமலே போய்விட்டார்!

எந்த பிரபல எழுத்தாளர்கள் நாகர்கோவிலுக்கு/ கன்யாகுமரிக்கு வந்தாலும், நடராஜனுக்கு தகவல் வந்துவிடும். அவருடன் நான் போய் சந்தித்த மூத்த எழுத்தாளர்கள் அனேகம். எனக்கு அவர்களைப் பார்க்க தணியாத ஆவல் இருந்ததோ இல்லையோ, பார்வதி புரத்திலிரு ந்து தெற்கு ரோடு- இப்போது காலச்சுவடு விலாசமிருக்கும் K.P. Road -வழியாக நடந்து போகும்போது, பேச்சுத் துணைக்காகவாவது என்னையும் வற்புறுத்தி இழுத்துக் கொண்டுபோய்
விடுவார். அவர் மூலமாகத்தான் ‘மணி மேடை சுதர்ஸன் ஸ்டோர்ஸ் சுந்தரமையர் பையன் நம்ம வேப்பமூடு ஜங்ஷனை வெச்சு ஒருநாவல் எழுதியிருக்கான்’ என்று ஒருபுளியமரத்தின் கதை கையெழுத்துப் பிரதியைப் படித்துப் பார்த்தேன். பிறகுதான் அது சரஸ்வதியில் தொட ராக வந்தது.

நாஞ்சில் நாட்டுஎழுத்தாளர்களிடம் அவருக்கு தனிப்பிரியம். கிருஷ்ணன் நம்பிக்கும், சு.ரா.வு க்கும் நெருங்கிய நண்பர். ஒருநாள் மாலை என்னிடம் ‘நாறோலுக்கு’ வரியா? க.நா.சு. வந்திருக்காராம். சென்ட்ரல் லாட்ஜிலே தங்கியிருக்கார். பாத்துட்டு வருவோம்’ என்றார். ’வரியா?’ என்பதெல்லாம் ஒரு மரியாதைக்குத்தான். எப்படியும் இழுத்துக் கொண்டு போய் விடுவார். எனக்கு அப்போதுதன் இனிஷியலை K.N.S. என்று ஆங்கிலத்தில் சுருக்காமல், தமிழில் க.நா.சு. என்று வைத்துக் கொண்டிருப்பவரை பார்த்துவிட்டு வரலாமேயென்று தோன்றியது.

லாட்ஜில் சின்னஅறையில் நம்பியும், சு.ரா.வும் அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள். சட்டை யில்லாத, பூணூல் இல்லாத உடம்பு, இன்னும் மறையாத அம்மைத் தழும்பு, பூவிழுந்த கண், சீப்பையே கண்டிராத தலை. பிற்காலத்தில் தன் ஒரே மகளை எனக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்போகும் மனிதரை நான் முதன் முதலில் சந்தித்தேன்.ஆனால்தன் ’வருங்கால மாப்பிள்ளை’ க்கான எந்த மரியாதையையும் எனக்குத் தரவில்லை! படுக்கையின் ஒரு மூலையில் நானும் ஒண்டி உட்கார்ந்து, பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பேச்சு நடுவில், ‘காப்பி சாப்பிடலாமே.. கோல்டன் லாட்ஜில சொல்லுவோம். கிச்சா மணிகுண்டுப் போத்தி ஹோட்டல்லேருந்து ரசவடை வாங்கிண்டு வருவன்.’ என்று நடராஜன் சொல்ல, ராமசாமி கொடுத்த பத்துரூபாய் நோட்டுடன் கீழேவந்தேன். ‘கெட்டிச் சட்னி நெறைய வைக்கச்சொல்லுங்க’ என்று க.நா.சு சொன்னதும், மணி மேடையிலிருந்து ரெண்டணா வாடகைசைக்கிள் எடுத்து வடசேரி இறக்கத்துக்குப் போனதும் நினைவிருக்கிறது.

நான் தில்லிபோன பிறகு, அறுபதுகளின் இறுதியில் க.நா.சு. சென்னையிலிருந்து தில்லி வந்துவிட்டதாக அறிந்தேன். அவ்வப்போது ரஃபிமார்க் I.E.N.S. ஹாலில் கஸ்தூரிரங்கன் நடத்தும் கணையாழி மாதாந்திரக் கூட்டங்களிலும், கர்ஸன்ரோடு மலையாளி மெஸ்ஸிலும், நான் மெம்பராக இருந்த தில்லி ஃபிலிம்ஸொசைட்டி திரையிடல்களிலும் அவரைப் பார்த்திரு க்கிறேன். சர்வதேச திரைப்படவிழாவில் நான் போகும் நாலு தியேட்டர்களில் ஒரு தியேட்ட ருக்கு மகளுடன் வந்திருப்பார். ஒரு வணக்கத்தோடு சரி. என்னை சுத்தமாக மறந்திருந்த அவரிடம், ‘நிறைய கெட்டிச் சட்னியோடு ரசவடை வாங்கித்தந்தேனே!’ யென்று பழங்கதை யால் துன்புறுத்தியதில்லை. பிறகு முளைத்த UNI கான்டீனுக்கும் அடிக்கடி வருவார்.

அவர் தோற்றமோ என்னவோ இணக்கமாக பேசத்தோன்றவில்லை. 1970-ல் என் வற்புறுத்த லுக்காக இ.பா. மழைநாடகம் எழுதியதும், அதில் கதாநாயகியாக நடித்த ஜமுனாவுக்கு, எனக்கே தெரியாமல் என் மேல் ’பற்று’ ஏற்பட்டதையும் சொல்லியிருக்கிறேன். மாமிகளின் மத்தியில் எப்போதும் எனக்கு ஒரு நல்ல பெயர் உண்டு. ‘மணிக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பாக்கணும். ஆண் காரியம் பெண் காரியம் தெரிந்த சூட்டிகை. கை நிறைய சம்பளம் வாங்கறான். எந்த மகராஜிக்கு குடுத்து வச்சிருக்கோ?’ என்று பலரும் சொல்லக் கேட்டிருக் கிறேன். இ.பா.வின் மாமியார் மூலமாக எனக்கு வேறு இடத்தில் பெண் பார்ப்பதை
அறிந்து, மகள் தந்தையிடம் தன் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.

அடுத்த நாள் காலை க.நா.சு. நான் அப்போது வேலை பார்த்த பிர்லா ஆபீசுக்கு வந்து
என்னிடம் பேசினார். அப்போதுதான் எனக்கே அந்த எண்ணம் இருந்ததை உணரமுடிந்தது. என்அக்காவிடம் க.நா.சு. வந்த விஷயத்தை சொன்னபோது, ‘ஆமாண்டா ரொம்ப நல்ல பொண்ணு. நமக்கு ஏன் இந்த ஐடியா முன்னாடி தோணலே?’ என்று என் திருமணத்துக்கு முதல் அட்சதை போட்டார்.

காதல் திருமணங்களில் ஏற்படும் எந்த பிரச்னையும் இல்லாமல் இரு குடும்பத்தினரின் ஒத்த கருத்தோடு ஜமுனாவின் கைத்தலம் பற்றினேன். திருமணம் ஒரு கனமழைநாளில், போட்ட பெரிய பந்தலெல்லாம் தண்ணீரில் முழுகி, அங்கிருந்த ஒரு நாடகமேடையில் இனிதே நடந்தேறியது. எனக்கு நாடகமே உலகம்அல்லவா! இ.பா.வின் 'மழை' நாடகத்தில் தொட ங்கியகாதல், அவரது இரண்டாவது படைப்பான போர்வை போர்த்திய உடல்கள் நாடகத்தில் நடிக்கும்போது கல்யாணத்தில் முடிந்தது. திருமணத்தன்று, தாரைவார்த்து கொடுக்குமுன் நடக்கும் விரதத்தின் போது க.நா.சு. பூணூல் அணிந்திருந்தார். பல வருடங்கள் கழித்து,
அவரிடம் ‘உங்களுக்கு நம்பிக்கையில்லாத விஷயத்தை ஏன்செய்தீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘உங்கள் வீட்டாருக்கு அதில் நம்பிக்கையிருந்தது. அந்த நல்ல நாளில் அவர்களை காயப் படுத்த விரும்பவில்லை!’ யென்று பதிலளித்தார். தில்லியில் நடந்த என் திருமண நாளன்று, பார்வதிபுரத்தில் முதல் பாராவில் குறிப்பிட்டிருந்த நடராஜன் தன் வீட்டில் ஒரு விருந்தே ஏற்பாடு செய்திருந்தாராம். அவருக்குப் பிடித்த எழுத்தாளர் க.நா.சு.வின் மகளை நம்ம ஊர் கிச்சா மணி கல்யாணம் செய்து கொள்கிறான் என்றால் சும்மாவா?

என் திருமணத்திற்குப் பிறகு, தனியாகப்போக நினைத்த அவரை வற்புறுத்தி என்னோடு இருக் கும்படி சொன்னேன். ஒருவரையொருவர் புரிந்து கொண்டதால், பத்து வருடங்களுக்கும் மேலாக ஒரே கூரையின் கீழ் எந்த உரசலுமில்லாமல், மற்றவர் கருத்துக்கு மரியாதையோடு இருக்கமுடிந்தது. அடுத்த நாளைப் பற்றிய கவலையே இல்லாதவர். எனக்கு அவரிடமிருந்த ஒரே வருத்தம் பத்திரிகைகளுக்கு எழுதி, வரும் பணத்தை இருக்கும் போது தாராளமாக ஹோட்டலுக்கு செலவழித்து விட்டு, பணம் இல்லாத நாளில், ‘ராஜி! போஸ்ட்மேன் வந்தா ரா?’ என்று மணியார்டருக்கு காத்திருப்பதுதான். ஞாயிற்றுக் கிழமைகளில் நான் சமைக்கும் சமையலை ரசித்து, சப்புக் கொட்டி சாப்பிடுவார்.

சும்மா சொல்லக் கூடாது.. நான் நன்றாகவே சமைப்பேன். என் அம்மாவின் சீடன். என் நண் பர்கள் வட்டத்தில் நான் செய்யும் மொரு மொருவேன்றிருக்கும் மசால் வடையும் தூள்பக் கோடாவும் பிரசித்தம். அவைதான் மாலை வேளைகளில் எனது ‘சோமபான’விருந்துகளுக்கு ஸைட்டிஷ்! (சிறுவயதிலிருந்தே நான் ஒரு மசால்வடை ப்ரியன். ‘சுண்டெலியா பொறந்திரு க்க வேண்டியவன்டா நீ’ என்று அலுத்துக் கொண்டே, என் அம்மா எண்ணெய்ச் சட்டியை வைப்பாள்!) க.நா.சு. பத்து வடைகள் சாப்பிட்ட பின்னும், ‘ராஜி! மணி பண்ணின வடை இருக்கா? இருந்தா, இன்னும் ரெண்டு கொண்டு வாயேன்!’ என்று கேட்டு வாங்கிச் சாப்பிடு வார். என் எழுத்தைப் பாராட்டும் போது கிடைக்கும் சந்தோஷம் அப்போது வரும். என் எழுத்தைப் பாராட்டும்போது கிடைக்கும் சந்தோஷம் அப்போது வரும். என் குழந்தைகளுக்கு பிரியமான தாத்தா. என் குழந்தைகளுக்கு உலக இலக்கியத்தை அறிமுகம் செய்தவர்.

மாலை நேரங்களில் ஒருநாள் கூட நண்பர்களுடன் ‘Bar’ திறந்திருக்கும் என் ‘தாகசாந்தி கேந்திர’த்துக்கு அவர் வந்ததேயில்லை. வருடாவருடம் டிசம்பர் 31 இரவு நடக்கும் புத்தாண்டு பார்ட்டியில் ஒரு பெக் ’ராயல் ஸல்யூட்’ ஊற்றி அவர் ரூமுக்குச்சென்று, அவரை வற்புறுத்தி குடிக்கச்சொல்லுவேன். மரியாதை நிமித்தம் அதை வாங்கி வைத்துக்கொள்வார். அடுத்தநாள் காலையில் அது அப்படியே இருக்கும்!

தம்பதி சமேதராக நாங்கள் எப்போது தமிழ்நாட்டுக்கு வந்தாலும், வருமுன் ‘மெட்ராசிலே செல்லப்பா, முத்துசாமியைப் பாருங்கோ. சிதம்பரத்துக்குப்போனா மெளனியைப்பாத்துட்டு வாங்கோ. உங்க ஊருக்குப்போனா நம்பியையும், சுந்தரராமசாமியையும், திருவனந்தபுரத்தில் டி.கே. துரைசாமியையும் ஒரு நடை பாத்துட்டு வாங்கோ’ என்று அவர் சொல்ல மறப்பதேயில்லை.

சென்னையில் க.நா.சு. நடத்திய இலக்கியவட்டம், ராமபாணம், சந்திரோதயம், சூறாவளி க்குப்பிறகு, தில்லிக்கு வந்தபின்னும் அவருக்கு இலக்கியப்பத்திரிகை நடத்தும் ஆவல் தணியவில்லை. சமயம் நேரும்போதெல்லாம், என் மாமியார் ராஜி, ‘எங்காத்திலெ ஒட்டியாணம், வங்கி, காசுமாலை, புல்லாக்கு உட்பட ரெண்டு தடவை செட் நகை பண்ணிப்போட்டா. எல்லாத்தையும் சூறாவளி பண்ணிட்டார்’ என்று புலம்புவார். தில்லியில் Lipi Literary Syndicate என்ற அமைப்பைத்தொடங்கினார். இந்தத் தடவை நிறுத்தாமல் தொடர்ந்து Lipi லிபி என்ற ஆங்கில இலக்கியப் பத்திரிகை நடத்தவேண்டுமென்று விரும்பினார். அப்போது நான் HDPE Woven Sacks தயாரிப்பாளர்களின் அகில இந்திய சங்கத்துக்கு தில்லியில் பிரதிநிதியாக இருந்தேன். எழுபதுகளில் உரத்தட்டுப்பாடிருந்தது. துறைமுகங்களில் வந்திறங்கும் Bulk Urea/DAP/MOP உரங்களுக்கு 15 கோடி காலி சாக்குமூட்டைகள் தேவைப்பட்டன. இந்திய அரசின் உணவுத்துறையிடம் அந்த பெரிய ஆர்டரை வாங்கிக்கொடுத்து, அதை சரியாக நிறைவேற்றும் பொறுப்பு என்னுடையது. அவர்களை சும்மா விடலாமா? வசதியுள்ள 70 அங்கத்தினர்களிடம் Lipi Literary Syndicate-க்கு விளம்பரத்திற்காக, தலா ஆயிரம் ரூபாய்க்கு அவர்கள் தலையில் கை வைத்தேன். இதற்கெல்லாம் C.A.G. Report / Lok Ayukta Report வராது! என்னிடம் அவர்களுக்கு காரியமாகவேண்டியிருந்ததால், க.நா.சு.வுக்கு ரூ.70,000 வந்தது. அப்போது இது ஒரு நல்ல தொகை. அது தீரும் வரை லிபி நான்கு இதழ்கள் வெளிவந்தன! அவரது ஆசையும் தீர்ந்தது!

உங்களில் பலருக்குத்தெரியாத விஷயம் சரண்சிங் சிலமாதங்களுக்கு இந்தியப்பிரதமராக இருந்தபோது, அவர் நடத்தி வந்த Rural India என்ற பத்திரிகைக்கு க.நா.சு.வை ஆசிரியராக இருக்கும்படி வேண்டிக் கொண்டார். தினமும் வீட்டுக்கு கார் வந்து அழைத்துப்போகும். கட்சியிலிருந்த எம்.பி., ராம் விலாஸ் பாஸ்வானிடம் ஏற்பட்ட கருத்துவேற்றுமையால், இரண்டே மாதத்தில் கால் கடுதாசி கொடுத்துவிட்டார். சரண்சிங் எத்தனையோ வற்புறுத்தியும், போகவேயில்லை.

1982 வாக்கில் மைசூரில் யூ.ஆர். அனந்தமூர்த்தி ஏற்பாடு செய்திருந்த இந்திய எழுத்தாளர் பட்டறை முடிந்தபின் இருமாதங்கள் சென்னையில் இருந்துவிட்டு வருகிறேனென்று தில்லியிலிருந்து புறப்பட்டார். பல வருடங்களாக மறுபதிப்பு வராமலிருந்த அவரது எல்லா மொழிபெயர்ப்புகளும், படைப்புகளும் அப்போது புற்றீசல் போல புது பதிப்புகள் வர ஆரம்பித்தன. க.நா.சு.வின் பெயரைக்கூட கேள்விப்பட்டிராத இளம் தலைமுறையினர் அவரைப் படிக்கத் தொடங்கினர். ‘தமிழ்நாட்டிலே புதுசா என்னை கவனிக்க ஆரம்பிச்சுருக்காங்க. குங்குமத்திலும், துக்ளக்கிலும் தொடர்ந்து எழுதச்சொல்றா. சந்தோஷமா இருக்கு. கொஞ்சநாள் சென்னையிலெ இருக்கேன்’ என்று இன்லாண்ட் கடிதமெழுதிவிட்டு, என் ’சித்தன் போக்கு சிவன் போக்கு’ மாமனார் மைலாப்பூர் TSV கோவில் தெருவில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்தார்.

குங்குமம் பத்திரிகையில் அவர் எழுதிய ‘க.நா.சு. பக்கத்தில்’ கருணாநிதிக்கெதிரான விமர்சனங்களையும் பதிவுசெய்ய முரசொலி மாறன் அனுமதித்திருந்தார். சொந்த மகளுக்கும் மேலாக சென்னையில் எல்லா உதவிகளையும் செய்ய, லதா ராமகிருஷ்ணன், மற்றும் மஹாதேவன் போன்றோர் பக்கத்தில் இருந்தனர். இரண்டு மாதம் சென்னை வாசம் என்பது நான்கு வருடங்கள் நீடித்தது. க.நா.சு வாழ்க்கையில் அவை மகிழ்ச்சிகரமானவை. ஒரு பிரபல வார இதழின் நிருபர் இடக்காக ‘ரொம்பநாள் கழிச்சு சென்னைக்கு ஏன் வந்திருக்கீங்க? என்று கேட்டதற்கு, ‘கடைசிக்காலத்திலே இங்கே சாகலாம்னு வந்திருக்கேன்!’ என்று பதிலளித்தாராம். இந்த வார்த்தையை அவர் காப்பாற்றவில்லை. 1988-ல் தன் கடைசி நாட்களைக்கழிக்க அவருக்குப் பிடித்த தில்லியில் என் வீட்டுக்கு வந்துவிட்டார். இதைப்பற்றி விரிவாக இன்னொரு கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.

எண்பதுகளில் ஒரு தடவை நாகர்கோவில் போனபோது, பார்வதிபுரத்திலிருந்த என் அம்மாவைப் பார்க்க சுந்தர ராமசாமியுடன் போயிருந்தார். ‘அன்னிக்கு உங்காத்திலெ சாப்பிட்ட பூப்போல, வாயில் கரையும் இட்லியும், சாம்பாரும், அந்த தேங்காய் சட்னியும் போல நான் வேற எங்கெயும் சாப்பிட்டதில்லே. நானும் பல இடங்களில் கை நனைத்தவன்’ என்று பலநாள் சொல்லிக்கொண்டிருந்தார். ஆம்… என் தாயின் இட்லியும் சட்னியும் உலகப்பிரசித்தம்!

அதனால் தான் எனக்கு ‘முருகன் இட்லிக்கடை’யெல்லாம் சாதாரணமாகப்படுகிறது. எனக்கு நாக்கு நாலேகால் முழம். காளியாக்குடி அல்வாவில் தொடங்கி, எந்த ஊரிலும், சிற்றூரிலும் எந்தெந்த ஹோட்டல்களில் எதெது விசேஷம் என்பதற்கு அவர் ஒரு ரெடி ரெக்கனர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல…… சிம்லாவில் எந்த மூலையில் ராத்திரி பத்து மணிக்கு மேல் சிறந்த ‘கடக் சாய்’, சமோஸா கிடைக்குமென்பது அவருக்கு அத்துப்படி.

நாட்டுடமைக்கான காசோலையை முதலமைச்சர் ஜெயலலிதா திருமதி கநாசுவுக்கு வழங்குகிறார் - 2003

2003-ல் தமிழக அரசு க.நா.சு.வின் படைப்புக்களை நாட்டுடமையாக்கி, அவரது வாரிசுகளுக்கு ரூ.3.00 லட்சம் கொடுப்பதாக அறிவித்தது. இதற்கு தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் தலைவராக இருந்த டாக்டர். மா. ராஜேந்திரன் எடுத்துக்கொண்ட முயற்சி தான் முழுமுதற்காரணம். ஒரு மாதம் முன்பே, க.நா.சு.வின் பெயரை பரிந்துரைத்ததாகவும், அமைச்சர் விரைவில் அதை சட்டசபையில் அறிவிப்பாரென்றும் மா.ரா. தகவல் சொன்னார். அதற்கான அறிவிப்பு பத்திரிகைகளில் வந்த தினம், ஐந்தாறு பிரபல எழுத்தாளர்கள் என்னை தனித்தனியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாம் எடுத்த முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்ற ‘உண்மை’யை எனக்கு விளக்கமாக எடுத்துச்சொல்லி, கட்டாயமாக என் ‘நன்றி’யையும் பிடுங்கி வாங்கிக்கொண்டார்கள்! க.நா.சு.வின் மற்றொரு வாரிசான என் மனைவி, தனக்கு இதில் எந்தப்பங்கும் தேவையில்லையென்று எழுதிக் கொடுத்து விட்டதால், மொத்தப்பணமும் க.நா.சு.வின் மனைவி ராஜிக்கே வழங்கப்பட்டது. அதே வருடம் நாட்டுடமையாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரின் பணத்துக்கு, சுமார் 25 வாரிசுகள் போட்டி போட்டதும், அதற்கான விழா நடந்த கோட்டை முதலமைச்சர் அலுவலகம் வந்தபிறகும், ஒரு ’வாரிசு’ இறந்த எழுத்தாளரை கடைசிக் காலத்தில் கவனித்துக்கொண்டதால், தனக்கு அதிகப்பங்கு வேண்டுமென்று ’தெருச்சண்டை’யாக்கியதும் பார்க்க வேடிக்கையாக இருந்தது. கடைசியில் ரூ. 3 லட்சத்தை 26 காசோலைகளாக பிரித்து பங்கு போட்டுக்கொண்டு, சந்தோஷமாக வீடு திரும்பினார்கள்!

சாகித்ய அகாதெமி விருதன்று, கமானி அரங்கில் கநாசு தன் பேத்தி,

நா.பா., இ.பா.வுடன் பாரதி மணி - 1986…

தஞ்சாவூரில் பிறந்திருந்தாலும், க.நா.சு.வுக்கு கெட்ட வார்த்தைகள் பாடமாகவில்லை. அவர் திட்டி நான் கேட்டதேயில்லை. இ.பா.வும் அப்படித்தான். ஆனால் தி. ஜானகிராமன் இதிலும் வல்லவர்! சிலசமயம் க.நா.சு.வுடன் பேசிக்கொண்டிருக்கும் எழுத்தாள நண்பர் சக எழுத்தாளரை ‘பச்சைத்தெறியில்’ திட்டும்போது, இவர் நெளிவதை பலமுறை ரசித்திருக்கிறேன். ‘விடுய்யா’ என்று அவரை சமாதானப்படுத்துவார். தினமும் வெளியில் போய்விட்டு, வீடு திரும்பும்போது வாசலில் பேசியதற்கதிகமாக கேட்கும் தமிழ் தெரியாத ஆட்டோக்காரிடமும், என் குழந்தைகளை அவர் கண் முன்னால் அடிக்கும் என் மனைவியிடமும், அவரது அதிகபட்ச கோபத்தில் வரும் கெட்டவார்த்தை ‘Bloody Fool’ என்பது தான். வயதில் சின்னவர்களையும் அவர்கள் இல்லாதபோதும் கூட மரியாதையோடு தான் குறிப்பிடுவார். ’ராஜி! ஆதவன் வந்தாரா?’ பலதடவை அவரை மடக்கி, ‘எனக்கு ஒங்க மகன் வயசு தான் இருக்கும். ஏன் வாங்கோ….போங்கோனு படுத்தறீங்க!’ என்று கடிந்துகொண்டாலும் அவர் தன்னை மாற்றிக்கொண்டதில்லை.

எனக்கு அவரிடம் பிடித்த இன்னொரு விஷயம் அவரது அநாயாச மரணம். எல்லோருக்கும் அந்த பாக்யம் கிட்டுவதில்லை. லேசாக ஜுரம் என்று படுத்தவர் அடுத்தநாள் அதிகாலையில் சிரமப்படாமல், மற்றவர்களை சிரமப்படுத்தாமல் போய்விட்டார். எனக்கும் அதுபோல நடக்கவேண்டுமென்று தினமும் வேண்டிக்கொள்கிறேன். அவன் சித்தம் எப்படியோ?

—–ooooo00000ooooo—–

நன்றி:பாரதி மணி
–BharatiMani at hotmail.com

Saturday, December 03, 2011

கு ழ ந் தை - ஆ பி தீ ன்

**** ஆபிதீனின் முதல் கதை இது.
நிஜத்தில் நண்பர் ஒருவருக்கு கடிதமாக எழுதப்பட்ட எழுத்து இது.
நண்பர் அன்றைக்கு டெல்லி வாசி.
அன்றைய யாத்திரா சிற்றிதழ் ஆசிரியர் திரு.வெங்கட் சாமிநாதனோடு
இலக்கிய யாத்திரை மேற்கொண்டிருக்க
ஆபிதீனின் அக் கடிதம்
வெ.சா.வின் பார்வைக்குப் போகிறது.
அவர் பிரமித்ததோடு அல்லாமல், அவர் வழியே
அவரது அன்றைய நெருக்க நண்பரும்,
இலக்கிய ஆகிருதியுமான திரு.சுந்தர ராமசாமியின் பார்வைக்கும் போகிறது.
அவரும் ஆபிதீனின் அக்கடிதத்தை,
சிறந்த சிறுக்கதைக்கான அத்தனை முகாந்திரத்தோடு இருப்பதாக மெச்ச....
1 9 8 2 -ம் வருடதில்
ஏதோ ஒரு மாதத்தில்
'யா த் தி ரா -'வில் பிரசுரமாகிறது.
அன்றைக்கே இலக்கியப் பெரிசுகள் வியந்ததோர் சிறுகதையை எழுதிய
நம்ம பெரிசு ஆபிதீன்
இன்னும் சரியான உயரத்தை எட்டவில்லை என்பதில்
என்னையொத்தவர்களுக்கு மன சங்கடம் உண்டு.

-தாஜ்

*

கு ழ ந் தை - ஆ பி தீ ன்
---------------------------

தம்பி அவசரமாய் பதட்டத்துடன் சைக்கிளில் வந்து, 'புள்ளெ மெளத்தாப் பொய்டிச்சி ' என்று சொன்னபோது எனக்கு திகைப்பும் கடையில் வேலை பார்க்கும் சமதுவின் நாக்கின் பலம் பற்றி ஆச்சரியமும் பயமும் ஏற்பட்டது. கொஞ்ச நேரம் முன்புதான் நானும் ஹமீதும் நண்பன் ரஹீமைப் பார்த்துப் பேச கடைக்கு வந்தோம். அவன் இல்லை. நாகப்பட்டினத்திற்கு labour officer ஐ பார்க்கப் போனானாம். கொஞ்ச நேரத்தில் வந்து விடுவான் என்று சமது சொன்னார். உட்கார்ந்திருந்தோம். அப்போதுதான் சமது , வலது முழங்கை அருகே இடது கையை வைத்து இரண்டு தடவை தொட்டில்போல ஆட்டிக் காட்டி, 'என்னாங்கனி..ஒண்ணுமே இன்னும் எனக்கு நீம்பரு வாங்கிக் கொடுக்கலே..அதுவும் கடாக்குட்டியெல்ல ஒம்ம வாப்பா தட்டி வுட்டிருக்காஹா! ' என்று கேட்டார். 'ஓய்.. கொழந்தையோட நெலமை ரொம்ப 'இதா ' இருக்குதுங்கனி.. நாப்பது வரைக்கும் அது இருந்துடட்டும்..ஒமக்கு சுதியா பாபாபாய் கடையிலெ நாலு கொத்துப் புறட்டா வாங்கித் தர்றேன் ' என்றேன். 'சீ..சீ..அதெல்லாம் நல்லா பொழச்சுக்குங்கனி.. ' என்று ஆறுதலாய் அவர் குரல் நீளும்போதுதான் சேத்தான் வந்து குழந்தை இறந்து விட்டதை சொல்லி விட்டுப் போனான். 'ஓய்..பாத்தியுமாங்கனி..இப்பத்தானே சொன்னீரு... '- என் குரல் கம்மியது. 'சரி...நான் வர்றேன் ' என்று ஹமீதையும் இழுத்துக் கொண்டு அவசர அவசரமாய் வீட்டிற்கு கிளம்பினேன். 'எங்கே போறீங்க இவ்வளோ அவசரமா ? என்று அப்போது கடைக்கு வந்த ரஃபியின் தம்பி கேட்டான். ஹமீது, 'இல்லே..ஆபிதீன் வீட்டுலே புள்ள மெளத்தாப் பொய்டுச்சு..அதுதான் போறோம் ' என்றான். 'அப்ப நான் நேத்தே ஸ்வீட் வாங்கியிருக்கனும் ஆபிதீன்ட்டெ.. ' என்றான் அவன். எனக்கு அளவு கடந்த கோபமும் வெறுப்பும் பொங்கியது. அவன் மேல். ஓங்கி ஒரு அறை விடலாமா என்று நினைத்தேன். 'என்ன இவன் இப்படி பேசுறான்..! ' அவன் அண்ணன், நான், எங்களின் வித்தியாசமான- ஊரின் வெறுப்பைக் கொட்டிக் கொள்கிற- பேச்சு , நடவடிக்கை இவனுக்கு இந்த மாதிரி மெளத்தையெல்லாம் சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டு விடுகிற ஆட்களாய் பட்டிருக்கக் கூடும்.. இவன் என்னிடமிருந்து ஒரு சிரிப்பையும் எதிர்பார்ப்பவனாக தோன்றிற்று..! 'சரி..விட்டுத் தொலை ' என்று நினைத்துக் கொண்டு கிளம்பினோம்.. 'புள்ளெமேலே ஒங்களுக்கு ரொம்ப பாசமோ ? ' என்றான் மறுபடி. எனக்கு பயங்கரமான வெறி வந்தது. 'ஓய்..போங்கனி..மூஞ்சியைப் பாரேன்..எந்த நேரத்துலெ எது பேசுறதுன்னே தெரியாதா ஒமக்கு ?.. 'என்று ஹமீது அவனைத் திட்டிவிட்டு 'சரி..வா.. ' என்று இழுத்துக் கொண்டு போனான். சாதிக்கின் முகம், தான் எதிர்பார்த்த ஹீரோ முகம் கிடைக்காததால் வாடிப் போனதுமாதிரி இருந்தது..

எனக்கு உம்மா கர்ப்பமாயிருக்கும் செய்தி 3 மாதத்திற்கு முன்புதான் தெரியும். சந்து வீட்டில் பேசிக் கொண்டிருக்கையில் சின்னமாமி , ' என்ன ஆபிதீன்..ஜாலிதான்..தங்கச்சியோ தம்பியோ வரப்போவுது ' என்று சொன்னார்கள். எனக்கு சட்டென்று உம்மாவின் நினைப்பு வரவில்லை. வருஷாவருஷம் தவறாமல் பெத்துப்போட்டு விடுகிற சின்னம்மாவின் ஞாபகம்தான் வந்தது. வாப்பா, இரண்டு மூன்று சபர் இந்த பதினோரு வருடங்களுக்கிடையில் வந்து ஏதும் புதிதாய் நடக்கவில்லை. அதனால் உம்மாதான் இப்போது என்பது சட்டென்று புரியவில்லை எனக்கு, மாமி உடைத்தார்கள் விஷயத்தை. எங்கள் குடும்பத்திலேயே இந்த ஜூலைஹா மாமி ஒரு ஆள்தான் நல்ல freeயாக எனிடம் பேசுவார்கள். ஒருநாள் சந்து வீட்டில் எல்லா பொம்பளைகளும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது பக்கத்து வீட்டு கனியாச்சி தன் ஐம்பது வயதிலும் அதுவும் உடம்பு சரியில்லாமல் ஊருக்கு வந்திருந்த மாப்பிள்ளை சையது நானாவை மயக்கி இரட்டைக் குழந்தையை பெற்றுப் போட்டது பற்றி உம்மா கேலி பண்ணிக் கொண்டிருக்கும்போது ஆச்சி சொன்னார்களாம் ' என்னட ஆளுக்கு இருக்கு இந்த வயசிலேயும்...ஆனா 'ஜீனத் 'தோட 'குமர்ர ஹக்கு 'க்குக்கு காலம் முடிஞ்சி போச்சு '..என்று... தாங்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பதாகவும் மற்றபடி 'விஷயம் ' முடிந்துபோன மாதிரி இல்லையென்றும் வருகிற சபரில் மாப்பிள்ளை வரும்போது நிரூபிப்பதாகவும் உம்மா சொன்னர்களாம். 'சவால் வுட்டுலெ உம்மா வவுத்துலெ வாங்கியிருக்காஹா இப்ப..! ' என்று மாமி சொன்னார்கள். 'ஆனாலும் அல்லாட நாட்டத்தை யாராலெ மாத்த முடியும் ? சொல்லு.. நெனைச்சா குழந்தை பெத்துக்க முடியுமா ? இல்லே வவுத்துலெ வந்து கலைச்சே தீர்ரதுன்னு ஒத்தக் கால்லெ நின்னாலும் அதுக்கு போறதுக்கு எடம் இல்லாதப்ப பொய்டுமா ? இதல்லாம் யார்கிட்டெ இருக்கு ? சொல்லு. இப்ப இந்த 'ஹனீஃப் 'ஏ இருக்கான், இவன் வாணாண்டு எவ்வளவு மருந்து மாத்திரை!..ஆனா எல்லாத்தையும் முழுங்கிப்புட்டு எங்கேயோ ஒளிஞ்சி இருந்துட்டு வந்து இப்ப மேயிறானே..! ' என்றார்கள். எனக்கு என்ன சொல்வதென்று விளங்கவில்லை. 'ஏற்கனவே நாங்க அஞ்சு பேரு இருக்கோம். மூத்தவன் எனக்கு இப்ப 23 வயசாவுது..கொஞ்சம் கட்டுமானமா இருந்திருக்கலாம்தான். அப்படியும் சொல்ல முடியாது. பதினோரு வருஷமா வாப்பா ஜாக்கிரதையாத்தான் இருந்திருக்காஹா..இப்ப என்னவோ...ம்...ஜாக்கிரதை ஜாக்கிரதைன்னு பெண்டாட்டி கூடப் படுக்காம போனா வேறயாருகூடத்தான் படுத்துக்குவாஹா ? எங்க கூடவா ?! சரிதான்..பெத்துப் போடட்டுமே ' என்றேன்.

இடையில் பெரியமாமி , வாப்பா போட்ட லெட்டருக்கு பதில் எழுத தாமதமாகிய போது வாப்பா மறு லெட்டர் உம்மாவிற்கு போட்டார்கள். 'பொம்பளைப்பிள்ளை 5, 6 பெத்தா இப்படி கவைலை வந்து எழுதத் தோணாதுதான்..அதுதான் பாத்திமா ஜொஹரான் பதில் எழுதவில்லை போலும். சரி, நீங்களாவது இந்தத் தடவை ஆம்பிளைப்பிள்ளை பெற்று அதனிடம் கொடுக்கவும் ' என்று. வீட்டில் சிரித்தார்கள். 'ஆம்புளைப் புள்ளைதான் பொறக்கும் ' என்று வீட்டில் பாட்டியா ஹைஜாம்மா, மாமி எல்லோரும் சொன்னார்கள். இவர்களுக்கு ஒரு கணக்கிருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் தெருவில் அல்லது சொந்தக்காரர்களிடத்தில் பிறக்கிற பிள்ளைகள் ஆண் பெண் என்று அமைவதில் அந்தக் கணக்கின் விடை இருக்கும். எனக்கெல்லாம் இது ஒன்ரும் புரியாது. ஆனால் பல சமயங்களில் அவர்கள் சொன்னது பலித்திருக்கிறது.

நோக்காடு வந்த நாள்வரை இடையில் வேறு ஏதும் உம்மாவிற்கு அதிர்ச்சியான சம்பவங்கள் நிகழவில்லை- ஒன்றைத்தவிர. நானும் தம்பி சேத்தானும் கடைத்தெருவில் உட்கார்ந்திருக்கையில் இங்கே, வீட்டில் குடிகார பெரியாப்பா அம்மாவை அரிவாளால் வெட்டத் துரத்தியது. உம்மா 'ஒத்தத் துப்பட்டி 'யுடன் ஓடி சந்து வீட்டில் புகுந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சி நடந்து ஒரு மணி நேரம் கழித்தே எங்களுக்குத் தகவல் வந்தது...தம்பி ஆத்திரமாய் 'அந்த கெழட்டு உம்மாலெ ஓக்கலுட கொதவளையெ பிடிச்சு நைச்சிட்டு வர்றேன் ' என்று வெறியோடு கிளம்பினான். அவனை சமாதானப்படுத்தி உட்காரவைத்துவிட்டு நான் வேகமாக கிளம்பி வந்தேன். இதற்குள் அவர் தெருவெல்லாம் சுத்தி ரகளை பண்ணிவிட்டு ஓய்ந்து போய் வீட்டுக்குள் புகுந்திருந்தார். சந்தில் எல்லா பொம்பளைகளும் பழைய வீட்டு வாசல் திண்ணையில் கூட்டமாய் உட்கார்ந்திருந்தார்கள். நான் வந்ததும் 'இத இப்படியே சும்மா வுட்டுடாதே.. அந்த ஹயாத்தலிவானெ நாலு தட்டு தட்டிட்டு வந்தாத்தான் நீ ஆம்புளை..ஒரு சூலியை இபடித் தொரத்திட்டு வந்த அந்த கொல்லையிலெ போறவனை, அந்த குடிகார கழிச்சல்ல போறவனை...இப்படி சும்மா வுட்டுர்ரதா.. ? என்று ஆளுக்கு ஆள் கோபமாய் கத்தினார்கள். இவர் ஒவ்வொரு நாளைக்கும் வாஞ்சூரில் குடித்துவிட்டு வந்து வீட்டில் ரகளை வளர்த்துக் கத்த ஏதேனும் ஒரு அபத்தமான காரணம் இருக்கும். இவர் சபரிலிருந்து வந்து வீட்டிலிருக்கும் ஒரு மாதமும் வீட்டில் நெருப்பைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். செவுட்டுப் பெரியம்மாவிற்கு இவரின் காட்டுக் கத்தலைப் பற்றி துளி கூட அக்கறையில்லை. சிறு பிள்ளையில் காதில் வந்த நெருஞ்சி கட்டியைப் பாராட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள் என்று நான் நினைப்பதுண்டு. தன் மாப்பிள்ளையுடன் அறையில் சோழி விளையாடிக் கொண்டிருக்கும்போது தனது பேத்தனத்துடன் வீட்டு விஷயங்களையெல்லாம் சொல்ல , கத்தி ரகளை பண்ண எதிலும் ஒரு சான்ஸ் பார்க்கும் பெரியாப்பா அதில் தனக்குத் தேவையான points மட்டும் எடுத்துக் கொண்டு, அதை பூதகரமாக்கி, தைரியமாய்க் கத்த வாஞ்சூருக்குப் போய் குடித்துவிட்டு வந்து ரகளை பண்ணுவார். சொத்து விஷயமாய் என் வாப்பா ஏதோ மோசம் பண்ணி விட்டதாக தப்பாக நினைத்து எங்கள் குடும்பத்தில் வெறுப்பு பாராட்ட ஆரம்பித்தார். கடைசியில் எங்கள் குடும்பமும் மாட்டிக் கொண்டு விட்டது...! அறுத்துக் கிழிப்பார். எல்லாவற்றிலும் தப்பர்த்தம் காணுவார். வாசலில் சுவரோரமாய் நான் ஒண்ணுக்கு இருந்தால் அந்தப் பக்கம் வந்த அவரிடம் நான் வழித்துக் காண்பித்ததாக..இப்படி அமையும். அன்றைய காரணத்தை நடுவில் உட்கார்ந்திருந்த உம்மா அழுது கொண்டே சொன்னார்கள். அது நடந்த காலை நானும் ஹமீதும் கடைத்தெருவில் வந்து கொண்டிருக்கும்போது வாடா சுல்தானின் மகன் எப்போதும் போல குடித்து விட்டு உளறிக் கொண்டு போனான். அவனைப் பார்த்து ஒரு சொறிநாய் குரைத்தது...அவன் கோபமாய் அதனிடம், 'வாணாம்..என்னைப் பத்தி உனக்கு தெரியாது..ஜாக்கிரதையா சிரி..இல்லே காலை எடுத்துடுவேன் ' என்று சொல்லி விட்டுப் போனான். இதை வீட்டில் உம்மா, மாமி எல்லோரிடமும் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தோம். அவர் அப்போதே 'என்னடா ஜாடை காட்டிப் பேசுறது..ங்காத்தால ' என்று கேட்டிருந்தால் நானும் தக்கவாறு கொடுத்திருக்கலாம்- பதிலையோ அடியையோ...பெரிய மனுஷர் பெரிய மனுஷர் என்று பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாயிற்று..இப்போதெல்லாம் இவரின் ஆர்ப்பட்டத்தை சகிக்கவே முடியவில்லை. சின்னப் பிள்ளையாயிருக்கும்போது இவர் செம்பு, பானை என்று கைக்கு கிடைப்பதையெல்லாம் கத்திக் கொண்டே வீசி வீட்டுப் பொம்பளைகளை துரத்தியடிக்கும்போது, கூனிக்குறுகி ஏதச்சும் ஒரு கட்டிலுக்கடியில் பயந்து கொண்டு பார்த்துக் கொண்டிருப்பேன்.. ஆனால் இப்போது ? இவர் சொல்கிறபடி இவர் அந்தக் கால சம்ஸினாகவே இருக்கட்டும். செருப்பால் நான் ஒரு அடி அடித்து விட்டால் இந்தப் பெரிய மனிதனின் மானம் ரோஷம் எல்லாம் எந்தக் குப்பைத் தொட்டிக்குப் போகும் ? நாங்களும் எவ்வளவுதான் பொறுப்பது.. ? உம்மாவை வீட்டிற்குக் கூட்டி வந்தேன். இப்போது இவர் கத்தினால் 'ரெண்டுல ஒண்ணு ' பார்த்து விடுவது என்ற முடிவோடு. தீர்மானமான முகத்தை, பேச்சைப் பார்த்தால் பெரியாப்பாவின் ரகளை தானாக ஒடுங்கி விடும்.. இவரை யாரும் எதிர்க்காததினாலேயே வெறும் அலட்டலில் இத்தனை காலத்தை பெரிய துணிச்சல்காரராய் கழித்திருக்கிறார். பெரியாப்பா ரூமில் அமுங்கிப் போயிருந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டு வேலையில் உம்மாவின் பங்கு குறைந்து போயிற்று. தங்கச்சி எடுத்துக் கொண்டு விட்டாள். நான் பார்க்கும்போதெல்லாம் தாழ்வார நடு அறையில் உம்மா படுத்து ஓய்வெடுப்பது வழக்கமாயிற்று. ஒருநாள் காலை சந்து வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது 'நேத்து ராத்திரி மச்சிக்கு ஒரு மாதிரியா வந்திச்சி..நேரம் வந்திரிச்சின்னு நெனச்சோம். பாரு..இதானே டயம்..ஆனால் அப்புறம் சரியாயிடுச்சி..எப்படியும் 7,8 நாளைக்குள்ள பெத்துடுவாஹா பாரேன், நான் சொல்றேண்டு ' என்று மாமி சொன்னார்கள். அப்புறம் வீட்டில் 'கணக்குப்படி பார்த்தா இதுக்குள்ள பொறந்திருக்கனுமே..நாள் தள்ளிப் போவுதே.. ' என்று கவலைப் பட ஆரம்பித்தார்கள். நோன்பு மாதமும் நெருங்கி விட்டது. ஒரு செளகரியத்திற்காக, எனக்கு இந்த அல்லா, நோன்பு என்கிற வெளி விவகாரங்களில் நம்பிக்கையில்லையென்றாலும், நானும் நோன்பு பிடிக்க(!) ஆரம்பித்தேன். முக்கியமாய் நான் நிய்யத்து சொல்வதில்லை. ( 'ஹூம்..ரமலான் மாசம்..தொழுவ வர்ரதில்லே.. திராவியாக்கு வர்ரதில்லே..நிய்யத்தும் சொல்றதில்லேங்குறே..அப்பொறம் என்னா நோன்பு பிடிக்கிறேன்னு சொல்றே.. ? கொஞ்ச நேரம் பட்டினி கிடக்குறேன்னு சொல்லு.. - கோபமாய் பள்ளி சாபு) வீட்டுப் பிள்ளைகள் அவ்வளவு பேரும் நோன்பு பிடிக்கையில் எனக்காக காலைப் பசியாறவும் மதியானம் சோறும் ஆக்கித் தர வேண்டும். தனியாக தொந்தரவு கொடுப்பானேன் என்றுதான் சேர்ந்து கொண்டேன். இது தவிர சஹர் நேரம் ரசிக்கத்தக்கதாயிருக்கும். இரவு 3, 3 /12 மணிக்கு விழித்து, எல்லோரும் சோறு உண்பதும் பின் மாலை 6 மணிக்கு தர்காவில் குண்டு போட்டதும் நோன்பு திறப்பதும் மிகவும் நன்றாக இருக்கும்.

பிறை பதினெட்டுக்கான சஹரை முடித்து விட்டு வெளியான்ஸில் வழக்கம்போல வந்து படுத்துக் கொண்டேன். இந்த சமயத்தில் தூக்கம் நன்றாக வரும். இடையில் ஏற்படுத்தப்பட்ட தடங்கலுக்கு பரிகாரமாய். வாசல் கதவை யாரோ தட்டினார்கள். முழிப்பு வந்து விட்டதெனக்கு. வீட்டிலிருந்து யாரேனும் வந்து திறப்பார்கள் என்று நாலைந்து தட்டு வரை பொறுத்தேன். அப்புறம் நானே எரிச்சலுடன் கதவைத் திறந்தேன். பங்களா வீட்டு மும்தாஜூம் ஷமீமும். 'என்னா ஆச்சு ? ' என்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. 'ம்..எல்லாம் நல்லாத்தான்....உள்ளே போங்க ' என்று சொல்லி விட்டு வந்து படுத்து விட்டேன். காலை கொல்லைக்கு முகம் கழுவும்போது எங்கள் பகுதியான வடக்குப் பக்க தாழ்வாரத்தில் வெள்ளைத்துணியால் மறப்பு கட்டப் பட்டிருந்தது..உம்மாவுக்கு நோக்காடு ஆரம்பிச்சிடுச்சு போலருக்கு ' என்று நினைத்துக் கொண்டேன். வழக்கமாய் மேற்குப்பக்க தாழ்வரத்தோடு இணைந்துள்ள கூடத்தில்தான் மறப்பு கட்டுவார்கள். பெரியாப்பாவின் விரோதம். ஆதலால் இடம் மாறியிருந்தது. உம்மாவை பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்தப் பொம்பளைகள் விட மாட்டார்கள். ஏதாச்சும் பிரசவ காரியங்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதென்ன பிரசவ காரியம் என்று புரியவில்லை. எங்கள் வீட்டில் ஆஸ்பத்திரிக்கெல்லாம் யாரும் போவதில்லை. வீட்டிலேயேதான் நாசுவத்தி வந்து எல்லாவற்றையும் சரியாக்கிக் கொடுத்து விடுவாள். அன்சாரி மாமா, முத்துக் காக்கா ஆகியோர் வீட்டில் பார்ப்பதையே விரும்பினார்கள். 'எக்குத்தப்பா ஏதாச்சும் ஆயிட்டா நாகப்பட்டினம் கொண்டு போய்க்கலாம் ' என்பார்கள். பெரியாப்பாவின் இரண்டாவது மகள் காமிலாவிற்கு இந்த வீட்டில்தான் நடந்தது. மச்சான் படித்தவர். எவ்வளவோ தூரம் நாகப்பட்டினம் பெரிய ஆஸ்பத்திரிக்குத்தான் போகவேண்டுமென்று வாதாடினார். பொம்பளைகளிடமா முடியும் ? நாசுவத்தி ஹபீப்லாத்தாதான் கடைசியில் வீட்டுக்கு வந்தாள். இதனாலேயே மச்சான் கோபித்துக் கொண்டு பெண்டாட்டியுடன் தன் வீட்டுக்கு போய் விட்டார். வீட்டோடு இருக்கும் கோபம் இன்னும் தீரவில்லை.

மறப்பு உள்ளே பொம்பளைகள் ராஜ்ஜியமாக இருக்கும். சின்னப் பிள்ளைகள் மறப்பின் கீழுள்ள இடைவெளி மூலம் உள்ளே நடக்கும் ரகசியத்தை அறிய முயற்சிக்கும். தலையில் தட்டி அனுப்புவார்கள் பெண்கள். சில பெண்கள் ' உம்மாடி..பொறந்த எடத்தை பாக்கனும்டு ஆசைப்படுறான் பாவம்..டேய்...எல்லாமே ஹயாவுதாண்டா.. ' என்று வெடிப்பாய் பேசி அனுப்பும். பையன்கள் வெட்கத்துடன் ஓடி விடுவார்கள். நானும் சின்னப் பிள்ளையில் இப்படி மறப்பிற்குக் கீழ் பார்த்திருக்கிறேன். சுற்றிலும் பெண்கள் கூட்டம் உட்கார்ந்திருந்ததுதான் ஞாபகம் வருகிறது. அப்பொதெல்லாம் பிள்ளைகள் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வருவதாகத்தான் தீவிரமாய் நம்பிக்கை கொண்டிருந்தேன். நான்காவது படிக்கும்போது பக்கத்து பெஞ்ச் அப்துல்லா விஷயத்தைப் போட்டு உடைத்தான் என்றாலும் உம்மா வாப்பா விளையாட்டு என் வயது பெண்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போதிலும் எனக்கு இதில் முழு நம்பிக்கையில்லை. இந்த அப்துல்லா அவன் நண்பர்கள்தான் இப்படிச் சொல்வார்கள். வீட்டில் கேட்டால் வயிற்றிலிருந்துதான் வந்தது என்று சத்தியம் பண்ணிச் சொல்வார்கள். நிறைய புரியாமலிருந்தது. P.U.C திருச்சியில் படிக்கும்போது நண்பனுடன் ஒரு படம் பார்த்தேன். அதில்தான் குழந்தை எப்படி வருகிறது என்று காண்பித்தார்கள். எனக்கு புரிந்து போயிற்று. ஆனால் முன்னாடியிருந்த ஒரு ஆர்வம் சப்பென்று போனது. வீட்டில் 'புள்ளய எவ்வளவு செரமப்பட்டு பெக்குறொம் தெரியுமா ? ' மாமாவிடம் மாமி கொஞ்சலாய் கேட்கும்போது 'ஆமா..தொட்டித் துணியை நல்லா கையால இறுக்கிப் புடிச்சிக்கிட்டு 'யா முஹய்யத்தீன் 'னு மூணு தடவை கத்தி ரெண்டு முக்கு முக்குறீங்க. பெரீய்ய இதா இது ?! ' என்று நக்கலான குரலில் சொல்வார். பொம்பளைகள் சிரிப்பார்கள். ஒரு தரம் தம்பி, வீட்டில் Deckல் Donna Summerஐ போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். அவள் செக்ஸியாக முனகுவதை குஷியாகக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு 'என்னடாது புள்ள பெக்குறவ கத்துறமாதிரி கத்துறா.. நல்லாத்தான் பாட்டு கேக்குறே போ ' என்ற லாத்தாவின் குரல் சிரிப்பைக் கொடுத்தது.

அன்று நண்பன் ரஹீமின் கைலி கடையில் அவனுக்கு உதவியாய் நானும் ஹமீதும் பகல் ஒரு மணி வரை இருந்து விட்டு வந்து வெளியான்ஸில் படுத்து விட்டோம். மூன்று மணி இருக்கும். கார் வந்த சத்தம் கேட்டது. என்ன விஷயம் என்று எழுந்து போய் பார்த்தேன். கஷ்டமாக இருப்பதாகவும் இங்கே ஆஸ்பத்திருக்கு கூட்டிக் கொண்டு போவதாகவும் உம்மாவை மெள்ள அழைத்து வந்த மாமி சொன்னார்கள். கூட கனிமா, கலிமாபீவி, பாட்டி ஹைஜாம்மா வந்தார்கள். 'இத முன்னாடியே பண்ணித் தொலைச்சா என்னா ? என்னா சொன்னாலும் கேக்க மாட்டிங்களே.. சரி, கொண்டு போங்க நான் இதொ வர்றேன் ' என்றேன். 'புள்ளே இன்னும் ஒண்ணு ரெண்டு மணி நேரத்துலெ பொறந்துடும். நீ ஒரே தரியா நோன்பு தொறந்துட்டு வா ' என்றார்கள். அதுவும் சரியாகப்பட்டது. நல்லவேளை நாகூரில் பிரசவ ஆஸ்பத்திரி இருப்பது ஒரு அவசரத்திற்கு உதவுது என்று நினைத்தேன். பத்து பதினைந்து வருடமாய் இதோ வருது அதோ வருது என்று பல லட்சம் ரூபாய் ஒவ்வொரு தடவையும் வசூலாகி ஊர் பெரிய மனிதர்களின் வயிற்றுக்குப் போய் ஒரு மாதிரியாய் இப்போதுதான் கட்டி முடித்திருக்கிறார்கள். அப்போது..அடிக்கல் நாட்டும்போது ஒரு கழக அமைச்சர் பிரச ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டுவதால் வீட்டில் பெரியவர்கள் தைரியமாக 'அடிக்கல் ' நாட்ட வேண்டாம் ' என்று பேசி பெரிய கரகோஷத்தை வாங்கியது இப்போதும் நினைவில் இருக்கிறது.

ஜமால் யூசுப்தான் இந்த ஆஸ்பத்திருக்கு தலைமை டாக்டர். நல்ல பேர் இவருக்கு. 'ரொம்ப ஈஸியா வழுக்குண்டு இழுத்துப் போட்டுடுறாரு.. ' என்று. வழக்கம்போல நானும் ஹமீதும் நாலு மணிக்குமேல் எதிர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தோம். High School விடும் நேரம். இந்தப் பக்கமாய் மிய்யான்தெருவிற்கு நாலைந்து அழகான பெண் பிள்ளைகள் போகும் புர்ஹா போட்டுக் கொண்டு. ஆளுக்கு இரண்டு பிடித்திருந்தோம். இன்னொன்று இருவருக்கும் பொதுவாகிற நடவடிக்கை. இதைத்தவிர வயதுக்கு வரும் தோதிலிருக்கிற குதிர் மாதிரி இருக்கிற (நாங்கள் இதை paint என்போம்) பெண்பிள்ளைகளுடன் 'டா ' அடித்துக் கொண்டிருப்போம். எனக்கு இன்று மனது சரியில்லை. உம்மாவின் நினைப்பாகவே வந்தது. அந்தப் பெண்கள் ஒவ்வொருவராய் போனார்கள் துணைக்கு வரும் வேலைக்கார கிழவிகளுக்குத் தெரியாமல் நாசூக்காய் கை காட்டிவிட்டு. எப்போதும் போல நான் பதிலுக்கு கைகாட்டவில்லை. ஹமீதும்தான். இரண்டு நாள் முகத்தை 'உர் 'ர்ரென்று வைத்துக் கொண்டு போவார்கள். போகட்டும். வீட்டுச் சின்னப் பையன்களும் பெண்பிள்ளைகளும் ஆஸ்பத்திருக்கு ஓடி ஓடிப்போய் பார்த்து விட்டு வந்தார்கள். ஒரு பிள்ளை, 'ரொம்ப வேகமா கத்துறாஹா உங்க உம்மா ' என்று சொல்லிவிட்டுப் போன போது எனக்கு மனதெல்லாம் வலித்தது. 'ஏன் இப்படி ? நீயாகத்தானே வரவழைத்துக் கொண்டாய் ' என்று ஆத்திரப்பட்டேன். உம்மாவை நினைத்து பாவமாகவும் இருந்தது. ஆஸ்பத்திரிபோய் பார்த்துவிட்டு வருவோம் என்று கிளம்பினேன். 'இதபாரு..இப்ப ஆறுமணியாவுது. ஒரே தரியா நோன்பு தொறந்துட்டுப் போவோம் ' என்றான் ஹமீது. சரியாக 6.10க்கு சின்னத்தம்பி நானா சைக்கிளில் வந்திறங்கினார்.. 'என்னா தம்பி சேதி தெரியுமில்ல.. ? ஃபாருக் சொன்னானா ? ' என்றார். 'உங்ககிட்டெ சொல்லிட்டு வரச்சொன்னேனே அவனெ..புள்ளெ பொறந்திடுச்சி ' என்று அவர் சொன்னதும் என் மனது சந்தோஷமானது. 'என்ன பிள்ளை ' என்றேன் ஆவலுடன். அவர் பதில் சொல்லாமல் 'பிரசவம் ரொம்ப கஸ்டமா பொய்டுச்சு தம்பி..நானும் சுல்தானும்தான் ஜமாலை வீட்டுலேர்ந்து இழுத்துக்கிட்டு ஆஸ்பத்திரி போனோம். சும்மா சொல்லக்கூடாது. அவரும் ரொம்ப செரமப்பட்டாரு..ஒரே கத்து..எங்களுக்கெல்லாம் ஒரு மாதிரியா ஆயிடிச்சி..நல்ல வேளையா அல்லாஹூத்தாலா எல்லாத்தையும் சரியாக்கிட்டான்..ஆம்புளைப்புள்ளைதான்..சந்தோஷம்தானே ? ' என்று சொல்லிவிட்டுப் போனார்... ஃபாருக், 'இங்கேயா இருக்கிறீங்க நானா ? நான் கைலிக்கடையெல்லாம் தேடிட்டு வர்றேன்..ஆம்புளைப்புள்ளை பொறந்திடுச்சி..அழகாக்கிது..கலரு ஒங்கட மாதிரி வெள்ளை ' என்று அவசரமாக அவசரமாக சொல்லிவிட்டு சைக்கிளில் பறந்தான் எங்கேயோ.

நோன்பு திறந்துவிட்டு ஹமீதுக்கு ஏதோ வேலையிருந்தபடியால் நான் மட்டும் ஆஸ்பத்திரி போனேன். பிரசவ அறைக்கு வெளியே பெரியமாமி இன்னொரு நடுத்தர வயதுப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். பிரசவத்தைப் பற்றித்தான் பேச்சு இருந்ததாகத் தெரிந்தது. 'வா வாப்பா..வா.. பெரிய பாடாப் போய்டுச்சு போயேன்..உள்ளாக்க மச்சி இருக்கு. புள்ளையெப் பாத்துட்டு வந்துடு..ரொம்ப நேரம் இருந்தா நர்ஸ் கத்தித் தொலைவா ' என்றார்கள். உள்ளே போனேன். அறை ரொம்ப சுத்தமாக இருந்தது. ஒரு பெரிய விளக்கு மேலிருந்தது. மற்றபடி வேறு கருவிகள் ஏதுமில்லை. சிசேரியனாயிருந்தால் நாகப்பட்டினம் பெரிய ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு போவார்கள் போலும். ஒரு நீள கட்டிலில் உம்மா படுத்திருந்தார்கள். வயிறு பெருத்திருந்தது. இன்னொரு பொம்பளையுடன் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதைக் கம்மலான குரலில் சொலிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அது சரியாய் விளங்கவில்லை. அறையின் ஒரு மூலையில் உள்ள சின்ன நாற்காலியில் பாட்டி ஹைஜாம்மா அணைத்தாற்போல குழந்தையை ஒருமெத்தென்ற சின்ன துணிக்குவியலின் மேல் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பாட்டியா ஏதும் பேசவில்லை. அவர்களின் முகபாவமும் உதட்டைப் பிதுக்கி அவர்கள் தலையாட்டிய விதமும் பிரசவம் கஷ்டமாக இருந்ததைச் சொல்லிற்று. குழந்தை நல்ல சிவப்பாயிருந்தது. உரியக்கூடிய வெள்ளைத்தோல் போர்த்தியிருந்தது கொஞ்சம் அசிங்கமாகத்தான் பட்டது. ஆனால் முகம் நல்ல மாதிரியாக இருந்தது. எனக்கு, குழந்தை பிறந்த 10, 15 நாளைக்கு அதைப் பொதுவாகப் பார்க்கப் பிடிக்காது - அது கொழு கொழுவென்று அழகாய் இருந்தால் ஒழிய. அதன் பிறகு அந்தக் குழந்தையை நான்தான் தூக்கிவைத்துக் கொண்டாடுவேன். பொதுவாக எங்கள் குடும்பத்தில் குழந்தைகள் நல்ல கொழு மொழுவென்று பிறக்கும். தங்கச்சி, தம்பி எல்லாம் குழந்தையாய் இருந்தபோது இருந்த இருப்பு என் மனதில் நன்றாகப் பதிந்திருக்கிறது. வீட்டு போட்டோ ஆல்பமும் நன்றாக விளக்கும் இதை. எனக்கு நேர்த்தம்பியான சேத்தான் - சேத்தாப்பா என்று நாங்கள் செல்லமாய் கூப்பிடும் இப்றாஹிமை தூக்கி வைத்துக் கொள்ளவே ஒரு ஆள் அமர்த்தினார்களாம். அவ்வளவு குண்டாயிருப்பானாம். சொந்தக்கார கல்யாணம் ஒன்றிற்கு அவன் சிறு குழந்தையாயிருக்கும்போது காரில் சென்றபோது அவனைத் தூக்கிச் சென்ற மெளலானா இப்போதும் அவனைப் பார்த்துச் சொல்லுவார். 'அல்லா வச்சு காப்பாத்த..ஒன்னய தூக்கி எனக்கு நெஞ்சு வலியே வந்திரிச்சிடா, நெசமா! ' என்று. ஆனால் மாமி வீட்டுக் குழந்தைகள் அவ்வளவும் படு ஒல்லியாய் இருக்கும். இந்தக் குழந்தை மாமி வீட்டுடையது போலிருந்தது. ஆனால் முகம் தங்கச்சி சல்மா சாயலில் இருந்தது. 'சரி..நான் போய்ட்டு வர்றேன் ' என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன் மாமியிடம். 'எப்ப வூட்டுகு வருவாஹா ? ' என்றேன். 'ஜமால்ட்டெ கேட்டுக்கிட்டுத்தான் மேக்கொண்டு பண்னனும்..நாள ராவக்கி வந்துக்கலாம் ' என்றார்கள்.

அடுத்த நாள் காலை ஆஸ்பத்திரி போனேன். ஒரு பெட்டில் உம்மா படுத்திருந்தார்கள். சுற்றி பொம்பளைகள். பக்கத்தாற்போல் ஒரு தொட்டிலில் குழந்தை படுத்திருந்தது. நேற்று இருந்ததை விட முகம் எனக்கு தெளிவாகப் பட்டது. நர்ஸ் வந்து குழந்தையைப் பார்த்தாள். 'பாரு பீவி..கொழந்தெ நல்லா அதிர்ஷ்டக்காரனா வருவான் பாரேன், அடே..நல்லா அழுவுடா..அழுவு.. ' என்று காலில் ஒரு சுண்டு சுண்டிவிட்டுப் போனாள். குழந்தை வீலென்று அழுதான். மறுபடியும் நர்ஸ் கொஞ்ச நேரம் கழித்து வந்து 'ஏன் பீவி..கொழந்தெ ரொம்ப பதரா ,ஒண்ணுமில்லாம இருக்கானே..மருந்து கிருந்து திண்டியா ? என்று கேட்டாள். 'இல்லேமா..அதுல்லாம் திங்கலே.. ' என்று உம்மா மறுத்தார்கள். 'இல்லே..நீ திண்டிருக்கே பீவி..இல்லேண்ணா இவ்வளவு weakகா இருக்க மாட்டேனே.. ' என்று சொல்லிவிட்டு மறுபடியும் குழந்தையின் காலில் சுண்டி அவன் வீலென்று அழுவதைப் பார்த்து சிரித்துக் கொண்டு போனாள். சுற்றிச் சுற்றி 'கொழந்தெ நல்லாயிருக்கான் பீவி ' என்று சொல்லிய வண்ணம் திரும்ப திரும்ப வந்தாள். அப்புறம் நான் கடைக்கு வந்து விட்டேன். ஹமீதும் அங்கிருந்தான். மதியம் இரண்டு மணிக்கு சேச்சியின் மூத்தமகன் நாஸர் கடைக்கு வந்தான். 'புள்ளையிட பாடு ரொம்ப கஷ்டமாப் பொய்டுச்சு நானா...ஆஸ்பத்திரி போயிருந்தேன்..மூச்சு விட புள்ளெ ரொம்ப செரமப்பட்டுச்சு..வலிப்பு வந்த மாதிரி கைகாலுல்லாம் இழுத்திச்சி. பொம்பளையெல்லாம் அழுவ ஆரம்பிச்சுட்டாஹா..ஜமால் வீட்டுக்குப் போய் அவசர அவசரமா அவரை கூட்டிக்கிட்டுப் போனேன். பார்த்தாரு.. 'புள்ளைய அழுவ வுடாம வச்சுக்கனும் .ஒரு வாரத்துக்கு ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்..வூட்டுக்கு வந்து தெனமும் பாக்குறேண் 'டு சொன்னாரு ' என்று சொல்லிவிட்டுப் போனான். நான்கு மணிக்கு நானும் ஹமீதும் ஆஸ்பத்திரி போனோம். நர்ஸ் பார்த்து அடையாளம் கண்டு கொண்டு சிரித்து அருகில் வந்தாள். 'தம்பி..அம்மா வூட்டுக்குப் போய்டுச்சு..கொஞ்சம் ஜாக்கிரதைய்யா பார்த்துக்கச் சொல்லு கொழந்தெயெ.. ம் ? ' என்று சொன்னாள். வீட்டிற்கு வந்து நான் குழந்தையைப் பார்த்தேன். நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தது. முகத்தில் ஒரு அமைதி இருந்தது, கஷ்டப்பட்டுக் கிடைத்த ஒரு அமைதி போலிருந்தது.

அன்று சாயந்தரம் நோன்பு திறந்து விட்டு ஹமீதைக் கூட்டிக்கொண்டு மாமாவின் ரிகார்டிங் கடையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். கண்ணாடியில் பச்சை ரோஸ் என்று வர்ணங்களை அள்ளிக் கொட்டி தர்கா படம் வரைந்து கொடுக்கும் செல்லசாபு ஒரு ஆளைக் கூட்டிக் கொண்டு வந்தார். சண்முகம். இவர் சாபு கடையில் உட்கார்ந்திருப்பார். ஏன் என்றால் ஏன் என்கிற பழக்கம். அவ்வளவுதான். வாஞ்சூரில் வாத்தியாராய் இருந்துகொண்டே துணிப்பைகளும் தயாரித்துக் கொடுப்பார். எழுத்து மட்டும் இருந்தால் அவரே எழுதிவிடுவாராம். மூன்று வெவ்வேறு சாமி படமும் போட வேண்டும் என்பதால் வந்தாராம். நாளை சாயந்திரம் பணத்தோடு வருவதாகச் சொன்னார். பணம் நிச்சயாமய் வெகு குறைவாகத்தான் கொடுப்பார். மெட்ராஸ் ஆர்டருக்கு ஒரு emblem டிசைன் பண்ணிக் கொடுத்து 300 ருபாய் வாங்குவேன் சாதாரணமாய். ஆனால் இவர் மூன்று டிசைனுக்கும் சேர்த்தே முப்பது ரூபாய் கொடுப்பதே பெரிய பாடு. வழக்கமாய் இவருக்கு வரைந்து தரும் G.N.Arts கணேசனிடம் போகுமாறும் என்னால் இப்போது முடியாதென்றும் எவ்வளவோ மறுத்தேன். கணேசனோடு மனஸ்தாபமாம் இப்போது. 'நீங்கதான் போட்டுத் தரனும்..சாபு உங்க ரூமை வந்து பாத்துட்டு அசந்து போய் வந்து என்னெட்ட சொன்னாரு. என்னென்னமோ அட்டகாசமா வரைஞ்சிருக்கிருக்கீங்களாமுல்ல ரூமெலெ ' என்றார். சாபுவின் நச்சரிப்பு தாங்காமல் நாளை காலை போட்டு விடுகிறேன். சாயந்திரம் வந்து எடுத்துக் கொள்ளுங்கள் ' என்றேன். தொந்தரவு பிடித்த வேலை. Butter paperல் Finishing ஆக பண்ணித் தொலையனும். அட்டையில் பண்ணுவதுபோல கடைசியில் white வைத்து பிசிரை சரிப்படுத்திவிட முடியாது இதில். 'சரிதான்- போட்டுக் கொடேன். அவன் பணம் தராத மாதிரியே நெனச்சுக்க ' என்றான் ஹமீது.

Customers ஒவ்வொருவராய் வந்து இன்னின்ன பாட்டுகள் record பண்ணவேண்டுமென்று கேட்டார்கள். குறித்துக் கொண்டிருந்தேன். பொதுவாக நோன்புமாதத்தில் நாகூர் ஹனீஃபா பாட்டுள்ள கேஸட்டுகள் அதிகம் விற்பனையாகும். இந்தத் தடவை சற்று குறைவுதான். இன்று முக்கால்வாசி ஆர்டர்கள் 'லாவரிஷ் ' (முக்கியமாக அமிதாப்பச்சன் பாட்டுக்கு) 'அலைகள் ஓய்வதில்லை ' என்று கேட்டு வந்ததுதான். அப்போது கடைசித்தம்பி ஹாஜா குரங்குப்பெடலில் வேகமாய் சைக்கிளில் வந்தான். 'நானா..புள்ளக்கி ஒரு மாதிரியா இக்கிது..டாக்டரை கூப்புடப்போறேன் ' என்று சொல்லிவிட்டு வேகமாய் போனான். கடைப்பையன் ஒருவனை டாக்டர் வீட்டுக்கு அவனும் போய் விஷயத்தைச் சொல்லிவிட்டு உடனே அன்சாரி வீட்டுக்கு வரச் சொல்லு என்று சொல்லிவிட்டு நான் வீட்டுக்கு விரைந்தேன். தாழ்வார அறையில் பாட்டி, இன்னாச்சி, மாமி, சின்னம்மா எல்லோரும் இருந்தார்கள். பெரியமாமியின் கையில் குழந்தை இருந்தது. உம்மா அதையே பார்த்தவண்ணம் பதைபதைத்து உட்கார்ந்திருந்தார்கள். சாதாரணமாய் குழந்தை 'வீல்..வீல்.. ' என்று தொடர்ச்சியாய் அழாமல் ஏதோ ஒவ்வொரு சாட்டையடியின்போதும் ஒருவன் கத்துவது போல 'அங்..அங்.. ' என்று விட்டுவிட்டு கத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தடவை கத்தி முடித்தபோதும் அந்த சிவந்த உடம்பில் கருமை ஓடிவந்து சூழ்ந்தது. ரத்தச் சிவப்பாயிருக்கும் குழந்தையின் உதடு கருத்துப் போனது. குச்சியாய் இருந்த கைகாலை இழுத்து இழுத்துக் கத்தியது..எனக்கு நெஞ்சில் ஒரு பந்து வந்து அடைத்தது.

மாமி தலையில் அடித்துக் கொண்டார்கள். 'என்னதான் செய்றதுன்னு தெரியலையே..பெரிய பாவாமாவுலெ போய்டுச்சி..எரக்கமேயில்லாமயில்லெ அல்லா இப்படி வேதனை படுத்துறான். இதப் பாத்துக்கிட்டிக்கிறதுக்கு நாம 'மெளத் 'தாப் பொய்டலாம் போலருக்கே.. ' என்று. உம்மாவை பார்க்க பயமாக இருந்தது. வெறித்து குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு அங்கு நிற்கவே எப்படியோ இருந்தது. வாசலுக்கு வந்து நின்று கொண்டேன். ஜமால் டாக்டர் சிறிது நேரத்தில் வந்து விட்டார். வீட்டில் நல்ல பழக்கம் உள்ளவர். நேரே அறைக்கு வந்து குழந்தையைப் பார்த்தார். இதற்குள் குழந்தை சற்று சுதாரிப்பாக ஆகியிருந்தது. அதன் அழுகையின் வேகம் மட்டுப்பட்டிருந்தது. 'இதுக்கு என்னெத்த மருந்து கொடுக்குறது ? அழுவ வுடாம பாத்துக்குங்க..அதான் இதுக்கு பெரிய மருந்து இப்ப. கத்தும்போது இந்த மருந்தை அதுட வாயிலெ தொட்டு வைங்க. வேறொண்ணுமில்லை..ஒரு வாரத்துக்கு ரொம்ப ஜாக்கிரதையா இருங்க..அதுக்கு அப்புறம் நாப்பது முடியுறவரைக்கும் கொஞ்சம் கவனமா, அதுக்குப்புறம் புள்ளெ சரியாகிடும்..ஒரு வாரத்துக்கு அப்படித்தான். ' என்று சொல்லிவிட்டு 'கெடு வைக்கிற மாதிரிலெ சொல்லிட்டுப் போறாஹா.. அழுவ வுடாம எப்படித்தான் புள்ளெயெ வச்சிக்கிறது.. ? ' என்று உள்ளே புலம்புவதை கேட்காதது போல் வெளியில் வந்தார். என்னிடம் 'ஆங்கிலத்தில், 'ஆபிதீன்..புள்ளையின் நிலைமை கவலை தரக் கூடியதுதான்..இதயத் துடிப்பு ரொம்ப குறைச்சலாயிருக்கு..Blue Baby..கவனமா அழவிடாமல் பார்த்துக்கச் சொல் ' என்று சொல்லிவிட்டுப் போனார். மறுபடியும் அறைக்குள் போனேன். குழந்தை இப்போது நல்லமாதிரி- கொஞ்சம் சிரித்த முகத்தோடு- இருப்பதாகத் தோணிற்று. ;கொஞ்ச நேரத்துலெ இப்படி திடார் திடார்னுட்டு வயித்துலெ தீயை வச்சிடுதே..என்ன பண்றதுண்ணு புரியலையே.. ' என்று அம்மா புலம்பிக்கொண்டே மாமியிடமிருந்து பால் கொடுக்க தூக்கிக் கொண்டார்கள். நான் வெளியான்ஸில் உட்கார்ந்தேன். குழந்தை அழுத அழுகை திரும்பித்திரும்பி காதில் ஒலித்த வண்ணம் இருந்தது. அதை அழுகை என்று சொல்ல முடியாது. உயிருக்குத் தவித்த தவிப்பு என்று சொல்லலாம்.

சின்னப்பிள்ளையில் எனக்கு ஓதிக் கொடுத்த சாபு என்னைப் பார்க்க வந்தார்கள். நோன்பு நாளையில் தெருப்பள்ளியில் திராவியா தொழுது கொடுக்க விஷேசமாய் ஊரிலிருந்து வந்து விட்டுப் போவார்கள். ஐந்தாறு நாட்களுக்கு முன்பு ஹமீது வீட்டு வாசலில் என்னைப்பார்த்து ' இன்னக்கி 'பள்ளி 'க்கு வந்துடு..நீ, ஹமீதுன்னு சேந்தாப்ப்ல நாலைன்சு பேரா வாங்க. ஆளுக்கு ரெண்டு முணு ஜூஜ்ஜூ ஓதுங்க வந்து ' என்றார்கள். நான் ஐந்தாவது படிக்கும்போதே அநேகமாய் சாபிடம் பள்ளிப் பாடங்கள் எல்லாவற்றையும்- பொதுவாக பள்ளிப் பிள்ளைகள் ஓதி கடைசியாய் முடிப்பதில்-ஓதி முடித்து விட்டேன். அதற்கப்புறம் பள்ளிப்பக்கமே காலை எடுத்து வைக்கவில்லை. நான் ஸ்கூலில் எட்டாவது படிக்கும்வரை எனக்கு நன்றாக ஓதத் தெரிந்திருந்தது. வீட்டில் நடக்கும் ஃபாத்திஹாக்களில் நானும் ஓதியிருக்கிறேன். அதற்கப்புறம் சின்னாப்பா கடையில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெரியார் பக்தர் என்னிடம் என்னென்னவோ கேள்விகள் கேட்டு கடவுள், வழிபாடு எல்லாவற்றிலும் சந்தேகம் உண்டு பண்ண வைத்து விட்டார். அதற்கப்புறம் நிறைய புத்தகங்கள் அவர் வந்து கொடுக்க நான் அதையெல்லாம் படித்து ஒரு மாதிரியாய் 'அல்லா கிடையாது ' என்று சொல்ல ஆரம்பித்து விட்டேன். பையன்கள் என்னை மாதிரியாய் ஒதுக்கி வைத்து விட்டார்கள். ஸ்கூலில் கலிஃபா சாரெல்லாம் என்னை ஜாடைமாடையாய் வெடைப்பார். பொதுவாக அவர் எல்லாப் பையன்களையும் ஒரு ஒரு காரணத்திற்காக வெடைப்பாரென்றாலும் (இதனாலேயே இரண்டு பெரிய பையன்களிடம் அறையே வாங்கியிருக்கிறார்) நான் படிப்பில் ஸ்கூல் ஃபர்ஸ்ட் ஆதலால் என்னை கேலி பண்ண இந்த விஷயம் ஒன்றுதான் மாட்டியது.. நான் ஏதேனும் கேள்வி கேட்டால் 'அவர்ட்டெயெல்லாம் நாம எதுவும் பேசக் கூடாது. அவரு அல்லாவையே இல்லேன்னவரில்லே! ' என்று ஏக மரியாதையுடன் என்னை சொல்லி வெடைப்பார். பையன்கள் நக்கலாய் என்னைப் பார்த்து சிரிப்பார்கள். எனக்கு அப்படியே கலிஃபா சாரை ஓங்கி அறையலாமா என்று வரும். கண்ணில் வெறி மின்ன உட்கார்ந்திருப்பேன்.. அப்போது எல்லாம் ஓதுவது கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்திருந்தது. இப்போது இந்த 23 வயதில் சுத்தமாய் ஒரு வார்த்தைக்கூட எழுத்துக் கூட்டி ஓத முடியாது. சலவாத்து கலிமா என்று கொஞ்சம் கொஞ்சம் சிலது நினைப்பிலிருக்கிறது. ஆதலாம் 'ஓதுறது மறந்து போய்டுச்சு சாபு ' என்றேன். தாடிசாபுக்கு (அவரை நாங்கள் அப்படித்தான் செல்லமாக கூப்புடுவோம்) தூக்கிவாரிப்போட்டது. 'அபடியெல்லாம் சொல்லாத..அது எப்படி மறக்கும் ? ம் ? இன்னக்கி ராவு எப்படியும் பள்ளிக்கு வந்துடனும்... ' என்று சொல்லிவிட்டுப் போனார். அன்றைக்கு நாங்கள் போகவில்லை. இது விஷயமாய் ஏதேனும் கேட்டால் இப்போது தர்மசங்கடமாயிருக்குமே என்று நினைத்தேன். ஆனால் அவர் இது பற்றி கேட்க வரவில்லை என்று தெரிந்து விட்டது. 'ஒஞ் சின்னாப்பா சொன்னாரு..இந்த மாதிரி , ஒனக்கு தம்பி பொறந்திருக்கான்னு. அதான் பாத்துட்டு போகலான்னு வந்தேன் ' என்றார். என்ன பேசுவதென்று தெரியாமல் சற்று நேரம் அவரையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். சாபுக்கு தாடிதான் நரைத்து விட்டதேயொழிய முக அழகு அப்படியே இருந்தது. அவர் பேசும்போது கண்ணில் ஏதோ மின்னும்..என்ன அடி வாங்கியிருக்கிறேன் இவரிடம்.! அப்பா....பள்ளிக்கு போகாவிட்டால் நாலைந்து பையன்களுடன் 'குண்டாக்கட்டை ' அனுப்புவார். அதனுடன் பிணைக்கப்பட்டிருக்கும் சங்கிலியை கழுத்தில் மாட்டிக்கொண்டு அந்த கனத்த கட்டையை தூக்கிக்கொண்டு பள்ளிக்கு போகும் சிரமத்தை விட அந்த அவமானம்தான் கொடுமையான விஷயம். பையன்கள் நாலைந்து நாள் உயிரெடுத்து விடுவார்கள் வெடைத்தே. எல்லோரும் மாட்டுவதுதான் பொதுவாக. பெண்பிள்ளைகளுக்கு பிரம்படி மட்டும்தான். எங்களுக்கெல்லாம் இரண்டும். இப்போது பள்ளியில் ஓதிக்கொடுப்பவர் பெண்பிள்ளையை மட்டும் அதன் மேல்தொடையில் அல்லது மார்பில் கிள்ளி கண்டிக்கிறார் என்று ஒரு செய்தி வந்து சங்கத்தில் அவரை கொஞ்சநாள் விலக்கி வைத்து மறுபடியும் சேர்த்தார்கள். 'ம்...நீல்லாம் தொழுவுறதை வுட்டுட்டாப் போலத் தெரியுது..ம்.. ' என்று ஆரம்பித்து இஸ்லாத்தில் சேர்வதற்கு ஜனங்கள் எவ்வளவு துடிக்கிறார்கள் என்பதையும் எங்கெங்கே ஹரிஜனங்கள் கூட்டம் கூட்டமாய் மதம் மாறியிருக்கிறார்கள் என்பதையும் அவர்களுக்கெல்லாம் முஸ்லீமாய் இருப்பவர்கள் எவ்வளவு தூரம் ஒரு நல்ல உதாரணமாய் இருக்க வேண்டுமென்றும் 'லெக்சர் ' பண்ண ஆரம்பித்தார். 'போச்சுடா ' என்று நினைத்துக் கொண்டு 'நீங்க வந்திக்கிறதை வூட்டுலெ சொல்லிட்டு வந்துடுறேன் ' என்று எழுத்தேன். 'அன்னைக்கே சொல்லலான்னு நெனச்சேன்..கைலியை கணுக்காலுக்கு மேலே கட்டு. என்ன இப்படி சீக்க சீக்க நீ, ஒன் 'செட் 'டெல்லாம் உடுத்துறீங்க ? தெருவுலெ இக்கிற அசிங்கத்தையெல்லாம் கூட்டுறதுக்கா ? அதுக்குத்தான் தோட்டி இருக்கிறானே.. ' - சாபு மறுபடியும் ஆரம்பித்தார்கள். இப்படியெல்லாம் அட்வைஸ் கொடுக்கிற , பள்ளியில் ஓதிக்கொடுக்கும் சாபு நிறைய பேர் ஊரிலுண்டு. ஒவ்வொருவரும் தான் சொல்வதற்கு முரணாய் நடத்தையில் (உதாரணமாய் ஒவ்வொருத்தரும் நிறைய பள்ளிப் பையன்களை கணக்கு பண்ணி வைத்திருப்பார்கள் - 'குப்பி ' அடிக்க. நிறைய குப்பி கொடுக்கும் பையனை 'குடுவை ' என்று அழைப்பார்கள்) இருப்பார்கள். ஆனால் இவர் ஒருத்தர்தான் எனக்குத் தெரிந்து தான் சொல்வதில் ஆழ்ந்த பிடிப்பும் நம்பிக்கையும் அதன்படி நடப்பவருமாயிருந்தார். அதனால் இவரிடம் எனக்கு மதிப்பிருந்தது. அதனால் பேசட்டும் என்று நினைத்துக் கொண்டு வீட்டுக்குள் போய் தாடிசாபு வந்திருப்பதாகச் சொன்னேன். 'நல்லதுதான்.. நோன்பு காசு குடுக்கச் சொல்லி வேற வாப்பா எழுதியிருந்தாஹா.. ' என்று உம்மா 25 ரூபாய் சுருக்குப் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார்கள். மாமி, 'ஏம்ப்பா..அப்படியே பேரு வச்சிடலாமே புள்ளக்கி ' என்று சொன்னார்கள். அதற்கு உம்மாவும் 'ஆமாம் சாபு வந்ததோட அதையும் நெறவேத்திட்டுப் போவட்டும். சாபெ கூப்புடு ' என்றார்கள். நான் அறைக்குவந்து சாபுவிடம் பணத்தைக் கொடுத்தேன்- வாப்பா கொடுக்கச் சொல்லி எழுதியிருந்ததாக. அடுத்த வருடம் - நான் சாமத்தியம் பண்ணும்போது - இதைவிட நிறைய தருவதாகச் சொன்னேன். 'அல்லா போதுமானவன் வாப்பா..நீ நல்லா சம்பாதிப்பே ' என்றார். பெயர் வைக்க உள்ளே அழைத்துப் போனேன். 'வாங்க சாபு ' - எல்லோரும் இவரிடம் ஓதினவர்களாக இருந்ததால் சாபிற்கு வரவேற்பு பலமாக இருந்தது. 'ஏம்ப்பா..என்னா பேரு வைக்கிறதுண்ணு நீனே சொல்லு..நாங்க வைக்கிற பேருலாம் ஒனக்கு நூதனாம தெரியும். நீனே நல்ல பேரா சொல்லு ' என்று மாமியும் உம்மாவும் சொன்னார்கள். உண்மைதான். எங்கள் குடும்பத்தில் அழகான பெயர் வைக்கும் பழக்கமே இல்லை. திருப்பி திருப்பி அப்துல் காதர் , முஸ்தபா, குலாம் தஸ்தகீர் என்று சொல்வதற்கு கொஞ்சமும் இனிமையேயில்லாத மாதிரிதான் வைப்பார்கள். நான் இதுபற்றி கேலி பண்ணி பேசுவதுண்டு. சின்னமாமா நிஜாம் ஒருத்தர்தான் தன் குழந்தைக்கு 'ஹனீஃப் அக்தர் ' என்று இனிமையாய் பெயர் வைத்தார். நான் ரஹீமிடமிருக்கும் ஒரு பெயர்ப் புத்தகத்திலிருந்து பார்த்து ஒரு பெயரை தேர்ந்தெடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். கேட்கனும் கேட்கனும் என்று நினைத்து மறந்தே விட்டேன். சட்டென்று அப்போது ஹமீதின் காலேஜ் நண்பன் நஜீமுல் ஆஸிஃப் பெயர் நினைவிற்கு வந்தது. சொல்ல்வதற்கு அழகாகவும் இருந்தது. இந்தப் பையரை வைக்கலாம் என்று சொன்னேன்... 'ஆஸிஃப்... ம்... நல்லாத்தான் இக்கிது. மொதல்லெ கொஞ்சம் நெறடா இருக்கும் சொல்றதுக்கு ' என்று உம்மா சொன்னார்கள். தங்கச்சி சல்மா 'நஜ்முல் ஆஸிஃப், நஜ்முல் ஆஸிஃப் ' என்று இரண்டு தடவை உச்சரித்துப் பார்த்துவிட்டு 'நல்லாக்கிது நானா, பேரு ' என்றாள். பதிமுன்று வயதாகியும் இன்னும் அவளுக்கு மழலை இருந்தது. இதைச் சரியாகச் சொல்லிவிட்டாளே என்று எல்லோரும் அவளைக் கேலி பண்ணினார்கள். சாபுவும் சிரித்தார்.

எப்படி பெயர் வைப்பார்கள் என்பது சரியாக எனக்குத் தெரியாது. ரொம்ப நாளைக்கு முன் குழந்தைக்கு - அது எந்தக் குழந்தைக்கு என்று ஞாபகம் இல்லை - சாபு வந்து , வீட்டில் பெயர் வைத்தது ஞாபகம் இருக்கிறது. லேசாக, தேன் , பால் என்று கிண்ணத்திலிருந்ததைத் தொட்டு நாக்கில் வைத்தது ஞாபகம் இருக்கிறது... இப்போது கொஞ்சம் ஆர்வத்துடன் கவனித்தேன். சாபு குழந்தையின் வலது காதில் லேசாக 'பாங்கு ' சொன்னார்கள். பின் அதன் இடது காதில் 'இகாமத் ' சொன்னார்கள். அப்புறம் மூன்று கிண்ணங்களிலிருந்த தேன், பால், தண்ணீர் மூன்றையும் ஒரு விரலால் தொட்டு தொட்டு 'நஜ்மூல் ஆஸிஃப் ' என்று சொல்லியபடி குழந்தையின் நாக்கில் தொட்டார். இப்படி மூன்று தடவை சாபு தொட்டுத் தொட்டு அதன் நாக்கில் நஜ்முல் ஆஸிஃப் என்று சொல்லியபடி தடவினார். அவர் நஜ்முல் ஆஸிஃப் என்று சொல்லும்போது சுற்றியுள்ளவர்களும் நஜ்முல் ஆஸிஃப் என்றார்கள். அப்புறம் அறையிலிருந்தவர்கள் ஒவ்வொருவரும் குழந்தையின் நாக்கில் அதன் பெயர் சொல்லி தேனையும் பாலையும் தண்ணீரையும் தொட்டு வைத்தார்கள். நானும் அப்படிப் பண்ணினேன். அது தன் நாக்கை உதட்டுப் பக்கம் கொண்டு வந்து சப்புப் கொட்டியது பார்க்க நன்றாக இருந்தது. குழந்தை பார்க்க நன்றாக இருந்தது அப்போது. கடைசியாய், சாபு ஃபாத்திஹா ஓதி முடித்ததும் வாப்பா அனுப்பியிருந்த ரொட்டி மிட்டாய் டின்னிலிருந்து நிறைய நிறைய எல்லோருக்கும் எடுத்துக் கொடுத்தார்கள் உம்மா. சாபு 'பொய்ட்டு வரேம்மா ' என்று உம்மாவிடம் பணம் வாங்கிக் கொண்டு என்னிடமும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டார். அன்று இரவு வாப்பாவிற்கு லெட்டர் எழுதினேன். குழந்தை பிறந்ததிலிருந்து வாப்பாவிற்கு எழுதிப் போடுமாறு நச்சரித்த பாட்டியவிடம் பெயர் வைத்த பிறகு சேர்ந்தாற்போல எழுதிவிடலாம் என்று சொல்லியிருந்தேன். எழுதி நாளை காலை எப்படியும் போஸ்ட் பண்ணி விடனும் என்று.. சந்தோஷமான செய்தி. தாங்கள் ஆசைப்பட்டபடி ஆண் குழந்தைதான். குழந்தை நன்றாக இருக்கிறது. உடம்புதான் பலவீனமாயிருக்கிறது. தேற்றி விடலாம்.. நஜ்முல் ஆஸிஃப் என்று அழகாய் பெயர் suggest பண்ணியது பற்றி நான் நியாயமாய் சந்தோஷப்படலாம்..என்று எழுதி பிற வீட்டு விஷயங்களையும் (குழந்தை பிறந்ததிலிருந்து கொஞ்சம் கூட எதிலும் பட்டுக் கொள்ளாமலிருக்கிற பெரியம்மா பற்றி மற்றும் இன்ன பிற) சேர்த்து எழுதினேன். கடைசியில் ஒரு பேச்சாளர் தன் கூட்டத்திற்கு வந்திருந்த , முன்னாலுள்ள குழந்தைகளை நோக்கி ' கடைக் குட்டியெல்லாம் கையைத் தூக்குங்க ' என்று சொன்னார்; கை தூக்கிய பிள்ளைகளிடம் 'ஏங்கடா..அதை நீங்களே தீர்மானிச்சிட்டிங்களா ? ' என்று கேட்டார் என்று எழுதி அப்படியே விட்டு விட்டேன்..!

அடுத்த நாள் காலை சீக்கிரமாகவே குளித்துவிட்டு வாசலில் உட்கார்ந்து போர்டில் Butter Paperஐ பொருத்திவிட்டு அந்த மூன்று பைகளுக்கான டிசைனை போட ஆரம்பித்தேன். மூன்றையும் தெளிவாய் ஸ்கெட்ச் பண்ணிவிட்ட பிறகு முதல் பைக்கான டிசைனை Indian Inkல் தொட்டு போட ஆரம்பித்தேன். என்னமோ எனக்கு மனது சரியாக இல்லை, சரியாய் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் சங்கடப்பட்டேன். Brush ஒரே இடத்தில் நின்று காய்ந்து போனது அடிக்கடி. திடாரென்று வீட்டினுள்: ஏற்பட்ட பதட்டம் வாசலில் லேசாக எனக்குக் கேட்டது. பிள்ளைதான் காரணம் என்பது எனக்கு புரிந்து போயிற்று..மேலே வரைய முடியவில்லை. அறைக்குள் போர்டை கொண்டுபோய் வைத்து விட்டு நாற்காலியில் சாய்ந்தேன். ஹாஜா ஓடிவந்து 'நானா...புள்ளக்கி மறுபடியும் மாதிரியா வருது ' என்று சொல்லிவிட்டு சந்து வீட்டில் சொல்லப் போனான். உள்ளே போய் குழந்தையை பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அது தன் மூச்சுக்கு அழும் கண்றாவி அழுகையை என்னால் தாங்க இயலாது என்று உள்ளே போகவில்லை. சந்து வீட்டிலிருந்து ஜுலைஹா மாமி, இன்னாச்சி, ஹமீது, உம்மாத்தா எல்லோரும் உள்ளே போவது தெரிந்தது. இனி ஜமால் டாக்டரை நம்பி பிரயோசனமில்லை..புது பஸ் ஸ்டாண்ட் பக்கமிருக்கும் அந்த குழந்தை டாக்டரிடம்தான் காண்பிக்கனும் உடனே என்று நினைத்தேன். பாட்டியா ஹைஜம்மா கண் கலங்க , அழுகை வாயிலிருந்து வெடிக்கும் நிலையில் 'வாப்பா..புள்ளைட 'ஹாலு ' சரியாயில்லெ..புள்ளடாக்டரு வெங்கடசுப்ரமணியனை கூட்டி வா வுடனே.. ' என்று சொன்னார்கள். நான் வீட்டுள் போய் அறைக்கு வெளியே நின்று கொண்டு பிள்ளையுடன் மன்றாடிக் கொண்டிருந்த மாமியிடம் போய் வெங்கடசுப்ரமணியனை கூட்டிட்டு வந்துடுறேன் ' என்றேன். நான் பிள்ளையின் முகத்தைப் பார்க்கவில்லை. ஆனால் அதன் அவல அழுகையின் சத்தத்தை என்னால் கேட்காமல் இருக்க இயலவில்லை. காதில் வந்து ஓங்கி ஓங்கி அறைந்து மனதை ரணப்படுத்தியது.. ' அவரு இந்த நேரத்துலெ இருக்க மாட்டாருப்பா..ராவக்கி ராவக்கிதான் ஊருக்கு வருவாரு..ஃபோன் பண்ணி உடனே இங்கே வரச்சொல்லு ' என்றார்கள் மாமி. 'ஃபோன் பண்ணி, அவரு எடுத்தாலும் அவருக்கிருக்கிற கூட்டத்தை வுட்டுட்டு இந்த நேரத்துல இங்கே வர்றது நிச்சயமில்லே மாமி...பேசாம, நாமே காரை எடுத்துக்கிட்டு நாகப்பட்டினம் போய் அவர்ட்ட காமிச்சிட்டு வந்துடலாம்..நான் போய் காரை எடுத்துட்டு வர்றேன் ' என்று சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாய் மிதித்தேன். கடைத்தெரு வழியாக பஸ் ஸ்டாண்டை அடையலாம் என்று போனேன் வேகமாய். நெல்லுக்கடைத் தெருவிலிருந்து மெயின்ரோடில் ஏறும்போது எதிர்ப்பக்கம் ஸ்கூல் இருக்கிற தெருவிலிருந்து கூட்டமாய் மாடுகள் வந்தன. ஐந்தாறு நிமிடம் காத்திருக்க வேண்டியதாயிற்று..மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த பஸ்களும் நின்று விட்டன. எனக்கு இது அசம்பாவிதமாகப் பட்டது. எருமை மாடுகள் உண்டுபண்ணிய இந்த ஸ்தம்பித்த நிலையை குழந்தையோடு இணைத்து மனம் குழம்பிப் போனேன். கொஞ்ச நேரத்தில் வழி சரியாகியது. எந்த ஊரிலும் இல்லாத புதுமையாக எங்கள் ஊர் பஸ் ஸ்டாண்டில் 12 புத்தம்புது 'T ' போர்டு வண்டிகள் நின்று கொண்டிருக்கும். ஆனால் அவ்வளவிலிருந்தும் சிங்கப்பூர் கடை வியாபாரி, புரோக்கர்களால் லைனுக்கு பறந்து விடும்.. 'இப்ப கார் இருக்கனுமே..இல்லாட்டா என்னா பன்றது ? ஹமீதுட மாமா காரை சொல்லி எடுத்துக்கிட வேண்டியதுதான் ' என்று பேசிக் கொண்டே புது பஸ் ஸ்டாண்டை அடைந்தேன். நல்ல வேளையாக இரண்டு கார்கள் இருந்தன. மாமாவின் ரிகார்டிங் கடைக்கு வரும் கஸ்டமரான சூசை ஒரு காரின் டிரைவராக இருந்தது நல்லதாகப் போயிற்று. 'என்ன நானா ? ' என்று அருகில் வந்தவனிடம் அவனை உடனே வீட்டுக்கு வருமாறும் ரொம்ப அவசரம் என்றும் சொன்னேன். 'வீடு தெரியுமா ? ' என்று கேட்டு நான் விளக்க முயற்சித்தபோது 'தெரியும்..தெரியும்..அன்சாரி வீடுதானே ? எலந்த மரத்தடி சந்து கிட்டெ ? சரி வுடனே வர்றேன் ' என்று காரை எடுத்துக் கொண்டு போனான். நான் சைக்கிளில் பின் தொடர்ந்தேன். நான் வீட்டை அடையும்போது காரில் பிள்ளையை வைத்துக் கொண்டு மாமியும் பக்கத்தில் இன்னாச்சியும் இருந்தார்கள். முன் சீட்டில் மச்சான் கலீல் இருந்தான். ஒரு ஆண்பிள்ளைத் துணை அவசியம்தான்... 'டாக்டர் வீடு தெரியுமா நாகப்பட்டினத்திலெ ? ' என்று கேட்டதற்கு 'ஓ..வெங்கட சுப்ரமணியந்தானே..அந்த அய்யன் வீட்டுக்கு எத்தனை கேசு கொண்டு போயிருக்கேன் ' என்று சூச்சை விரைவாக காரை எடுத்தான். வாசலில் நின்று கொண்டிருந்தேன். கார் போவதையும் அதில் எங்கள் வீட்டு ஆட்கள் இருப்பதையும் அப்போதுதான் தன் வீட்டு வாசலில் வந்து நின்ற ஹமீது பார்த்துவிட்டு என்னை நோக்கி வந்தான். அறைக்குள் போய் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். வாசலில் கார் வந்து நின்றது. பிள்ளையை அணைத்தபடி மாமி காரிலிருந்து இறங்கினார்கள். பிள்ளையின் முகம் தெளிவாக, அழகாக இருந்தது. மச்சான் கலீல் டிரைவரிடம் பணைத்தைக் கொடுத்து காரை அனுப்பிவிட்டு அருகே வந்தான். பிள்ளைக்கு டாக்டர் ஊசி போட்டதாகவும் மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்ததாகவும் சொன்னான். பஞ்சில் ஏதோ மருந்தை நனைத்து கொஞ்சம் கொஞ்சமாய் வாயில் வைத்தாராம். அழகாய் நாக்கால் நக்கியதாம். கொஞ்ச நேரத்தில் அழுகை நின்று விட்டதாம்.. வரும்போதே மருந்து மாத்திரையையும் வாங்கிட்டு வந்ததாகச் சொன்னான்.இரவு இங்கே வீட்டுக்கு வந்து டாக்டர் பார்ப்பதாகவும் சொன்னான். நான் உள்ளே போய் குழந்தையைப் பார்த்தேன். உம்மா குழந்தையை வைத்துக் கொண்டிருந்தார்கள். 'என்னமோ மேஹம் வந்து சூந்திச்சுன்னு சொல்லுவாஹா..அப்படால, கத்தும்போது கருப்பு வந்துடுது மூஞ்சிலெ..இன்னும் முழுசா கருப்பு போவலையே..கைகாலுவெரலெலாம் அந்த கருப்பு இன்னும் ஒட்டிக்கிட்டிக்கிதே..ஒதடு என்னா செவப்பாயிருக்கும்! அந்த செவப்பு முழுக்க வரணும் அப்பத்தான்.. ' என்று மாமியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகு நானும் ஹமீதும் மாமாவின் ரிகார்டிங் கடைக்கு வந்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்துவிட்டு ( 'அதெல்லாம் படிச்சஹ கேக்குற பாட்டு ' என்று English Songsஐ , அதை நாங்கள் கேட்பதை மாமா கேலி செய்தாலும் வருகிற Western Music உள்ள கேஸட்களை வாங்கி விடுவார்கள் எனக்காக. அதிர்ஷ்டவசமாய் அன்று John Lennon இருந்தது) எதிர்க் கடையில் இருந்த ஆரிஃப், 'அட..ஏங்க என்னென்னவோ போட்டு அறுக்குறீங்க..நீங்க வந்தாலே பெரிய தொந்தரவு..அந்த அமிதாப் பச்சன் பாட்டைப் போடுங்களேன்.. ' என்று கேட்டதால் அந்தப் பாட்டை கடைத்தெரு அலறுகிற மாதிரி ஆம்ப்ளிஃபேரில் வேகமாய் Volumeஐ திருகிவிட்டு அவர் தலையாட்டி கும்மாளம் போடுவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே ரஹீமை பார்க்கலாமென்று கைலி கடைக்கு வந்தோம் நானும் ஹமீதும். ரஹீம் இல்லை. சமது மட்டும்தான் இருந்தார்...

வேகமாக வந்து கொண்டிருந்தோம் நானும் ஹமீதும். சின்னாப்பாவும் நாஸரும் அவர்கள் வீட்டிலிருந்து வெளியில் வந்தார்கள். நாஸரின் கையில் ஏழெட்டு கள்ளிப்பெட்டி பலகைகள் சின்ன சின்ன துண்டாயிருந்தன. 'என்னாப்பா.. ?ஆமா, புள்ளெ மெளத்தாயிடிச்சி..ஹைர்..நீ வூட்டுக்குப் போ..நான் தார்காவிற்கு போய் 'தாரோக்கா ' கிட்டெ எழுதிக் கொடுத்துட்டு குழிவெட்ட ஏற்பாடு பண்ணிப்புட்டு வர்றேன். நாஸர் நம்ம கடைப்பக்கம் இருக்கிற ஆசாரிட பொட்டி செச்சிட்டு வருவான். கலீல்ட்டெ மோதினாரெ கூட்டிட்டு வரச்சொன்னேன். அவரு வந்ததும் என்னான்னா சாமான் வாங்கனும்னு கேட்டு எழுதி கடைக்கு கொடுத்தனுப்பு..நாஸர் வரும்போது வாங்கிட்டு வந்துடுவான்..சரி போ.. ' என்று சொல்லிவிட்டுப் போனார், நாஸரும் கூடப் போனான். சின்னாப்பா வீட்டிற்கு பக்கத்தில் நாலைந்து வீடுகள் தள்ளிதான் ஹமீதின் வீடு. அவன் 'நீ..போ..உம்மாகிட்டெ சொல்லிப்புட்டு வந்துடுறேன் ' என்று பிரிந்தான். நான் வீட்டிற்கு வந்தேன். வீட்டுத் திண்ணையிலும் எதிரே மொஹலார் வீட்டுத் திண்ணையிலும் பாய் விரிக்கப்பட்டு ஆட்கள் உட்கார்ந்திருந்தார்கள். வெள்ளைத் துப்பட்டியணிந்த பெண்கள் வீட்டுக்குள் போய்க் கொண்டிருந்தார்கள். கலீல் இருந்தான். 'என்னா, காட்டுப்பள்ளிக்கு போனியா ? ' என்றேன். 'ம்..கொஞ்ச நேரத்துலெ வர்ரேன்னு சொன்னாரு ' என்றான்.

தெருவில் போகிறவர்கள், வருபவர்கள் வீட்டு முன் உட்கார்ந்திருக்கும் கூட்டத்தை அதன் முகபாவத்தை கண்டு 'யாரு ? ' என்று கேட்டுவிட்டு பதில் கிடைத்தும் கிடைக்காமலும் கொஞ்ச நேரம் உட்கர்ந்திருந்து விட்டுப் போனார்கள்.ஹமீது வந்து விட்டான்.. 'நோன்பு தொறக்க எங்க வூட்டுக்கு வந்துடு..உம்மா கூப்புட்டாஹா ' என்றான். தலையாட்டினேன். ஊமையான ஒரு சொந்தக்கார பெரியவர் வாப்பாவிற்கு தந்தி அடிக்குமாறு சைகையால் நச்சரித்துக் கொண்டேயிருந்தார். 'ஆமா அடிக்கனுந்தான்..ஒன் சின்னப்பாகிட்டெ கேட்டுக்க..அஹ தர்காலேந்து வரும்போது அடிச்சிட்டு வந்தாலும் வருவாஹா ' என்று ஹமீது சொன்னது சரியாகப் பட்டது. மோதினார் வந்தார். வீட்டினுள்ளேபோய் பார்த்துவிட்டு வந்தார். என்னென்ன சாமான் வாங்கனும் என்று அவரிடம் கேட்டேன். 'ஒண்ணும் தேவையிலெ.பச்சைப் புள்ளதானே..ஒரு மீட்டர் வெள்ளைத்துணி வாங்கச் சொல்லுங்க. அது போதும். மத்ததை வூட்டுலேயே வாங்கிக்கலாம் ' என்றார். கலீல் வாங்கப் போனான். பக்கத்திலிருந்தவர் 'நடுமருந்துகடை செட்டியார் கிட்டெ வெவெரமா இத்தனை வயசு புள்ளேன்னு சொல்லிட்டாப் போதும்; அவன் கிளீனா எல்லாத்தையும் கொடுத்துப் புடுவான் ' என்றார். மோதினார் வெளியே போய்விட்டு ஒரு கால் மணி நேரத்தில் வந்து விடுவதாக சொல்லிப்போனார். வீட்டினுள்ளே அறையில் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்த பெரியாப்பா வெளியில் புறப்பட்டுச் சென்றார். 'மெளத் 'தில் கலந்து கொள்வதை தவிர்க்கவே இப்படிச் செய்கிறார் என்று வெளிப்படையாய் தெரிந்தது.

நாஸர் மையத்துப் பெட்டியோடு வந்தான். வீட்டுத் திண்ணையில் சாத்திவிட்டு, ' வாப்பா - தர்ஹாக்கு போனஹ - இன்னும் வரலியா ? சரி போய் கூட்டிட்டு வரேன் ' என்று சொல்லிவிட்டுப் போனான். சிறிது நேரத்தில் தன் வாப்பாவுடன் வந்தான். 'ஏன் சின்னப்பா, வாப்பாவுக்கு தந்தி கொடுத்திட்டிங்களா ? ' என்று கேட்டேன். 'இவன் எவ்வளவு பெரிய மடையனாக இருக்கிறான்! ' என்பது போல லேசாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு 'சேசே..தேவையில்லெ..லெட்டர் போட்டுக்கலாம் ' என்று சொன்னார். 'மோதினாரு வந்தாரா ? ' என்று கேட்டார். தம்பி, 'வந்துட்டு வெளியே போனாரு. கொஞ்ச நேரத்துலெ வந்துடுறேனாரு ' என்றான். 'என்னாப்பா....புள்ளக்கி கசப்பு மாத்திட சொல்லக் கூடாதா ? நல்ல புள்ளையிலுவப்பா நீங்க.. ' என்று கடிந்து விட்டு திண்ணையில் வியர்வை துடைத்தபடி தாடியைச் சொறிந்து கொண்டே உட்கார்ந்தார். மோதினார் வந்தார். 'என்ன காக்கா.. வந்த நீங்க அப்படியே புள்ளக்கி கசப்பு மாத்திட்டு போயிருக்கக்கூடாதா ? ' என்று சின்னாப்பா கேட்டதற்கு 'அ...யாரும் சொல்லலியே எங்கிட்டே ' என்றார் அவர். 'இதெல்லாம் இவனுவளுக்குத் தெரியாது..சின்னப் பயலுவதானே ' என்றார் சின்னப்பா. பக்கத்தில் உட்கார்ந்திருந்த நகுதா நானா , 'ஏன்..வூட்டுலெ இக்கிற பொம்பளையிலுவ சொல்லி இக்கிலாமுல்லெ..சரி..இப்ப என்னா அதுக்கு ? காக்கா, போயி கசப்பு மாத்துங்க ' என்று சொன்னார். வேண்டியவர்கள் வீட்டுக்குள்ளே போனார்கள். எனக்கு உள்ளே போய் பிள்ளையைப் பார்க்க எப்படியோ இருந்தது. ஆனால் சிறிது நேரம் சென்றதும் என்னால் பொறுக்க முடியவில்லை. நடுக்கட்டு முனையில் உள்ளே முற்றத்தின் ஓரத்தில் கிழக்குத் தாழ்வாரத்தை ஒட்டி ஒரு கட்டிலில் கிடத்தப்பட்டிருந்த குழந்தையைப் பார்ப்பதற்கு வாகாய் நின்று கொண்டேன். ஹமீதும் அருகில் இருந்தான். பெரியாப்பாவின் ஆறாவது பிள்ளை ஜமீல் ஒரு பெரிய வாளியிலிருந்து தண்ணீரை சொம்பில் மொண்டு சின்னாப்பாவின் கையில் கொடுக்க அவர் மோதினார் கையில் கொடுத்தார்.

'அஸ்ஹது அல்லாயிலாஹா இல்லல்லாஹூ வ அஸ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லா ' என்று கலிமா சொல்லிய வண்ணம் குழந்தையின் உடலை சுத்தப் படுத்தினார். துடிப்பு இல்லாமல் கட்டையாய் பிளாஸ்டிக் பொம்மை போல, கருமையைப் பூசிக் கொண்ட அந்த சின்ன உடலைப் பார்த்து உள்கட்டில் இருந்தவர்கள் கண்கலங்கினார்கள். சின்னப் பிள்ளைகள் விக்கி விக்கி அழுதார்கள். மோதினார் ஒரு வெள்ளைத் துணியை நாலைந்து கிழி கிழித்து குழந்தையின் உடலைப் போர்த்தினார். நான் நடுக்கட்டு தாழ்வாரத்தில் உட்கார்ந்தேன். எல்லோரும் கசப்பு மாத்தி முடித்ததும் வெளியில் வந்தார்கள். நான் ஜமீலைப் பார்த்து 'ஏண்டா இந்த நேரத்துலெ இங்கே வந்தே ? ஒன் வாப்பாவுக்கு நீ இதுல கலந்துகிட்டேன்னு தெரிஞ்சாக்கா பெரிய கலாட்டா பண்ணுவாருடா ' என்றேன். 'சும்மாயிரிங்க நானா..இதுல கலந்துக்காம வேற எதுலெ கலந்துக்குறது ? அவர் ஏதாச்சும் பண்ணட்டும்..பாக்குறேன் ' என்று கோபப்பட்டான். வெளி வாசலில் வந்து உட்கார்ந்தோம். எதிர் வெயில் ஏறியிருந்தது திண்ணையில். அந்த வெப்பமும் புழுக்கமும் எரிச்சலைத் தந்தது. அங்கேயிருந்த கனத்துப் போன மெளனத்தை என்னால் தாங்கவே முடியவில்லை. ஹமீது கொஞ்சமும் பேசாமல் அருகில் அப்படியே உட்கார்ந்திருந்தான். வந்து உட்கார்ந்திருந்த, பஜாரில் கடை வைத்திருந்தவர்கள் 'திடார்னு இப்படி ஒரு ரூலு போட்டு, ஒடவே முனிசிபாலிடி எடத்துலெ இக்கிற கடைபகுதியையெல்லாம் எடுக்கச் சொல்லி, ஒரேயடியா அதம் பண்ணுறானே ' என்று மெளனம் கலைத்தார்கள். கடையின் மேற்கூரை எந்த அளவு நீண்டிருக்க வேண்டும்; தனக்குத் தெரிந்த ஆஃபீஸர் இது விஷயமாய் என்ன சொன்னான்; கடைசியில் யானை முடுக்கு சந்துக்கும் ஒரு நேரம் வந்தது...கல்லெல்லாம் கொட்டியிருக்கிறான்... ஆனா அங்கே இருக்கிற இட்லி கடைகளுக்குத்தான் ஆபத்து.. 'என்று பேச்சு நீண்டது. 'என்னாயிருந்தாலும் நம்ம ஆளுன்னு ஒரு முஸ்லீமு மேலே இக்கிறதுனாலத்தானே வேலை இவ்வளவு ஜோரா நடக்குது...ஜாஃபர் ஷரீஃப் வந்தாரு..ரயில்வே ஸ்டேஷன்...ஆசுபத்திரி...இப்ப ரோட்டெல்லாம் அகலப்படுத்தி ஒரு டூரிஸ்ட் செண்டராவுல்ல இதை ஆக்கப் போறாராம்.. ' - நான் கவனித்துக் கொண்டிருந்தேன். 'அப்படியே தர்காவுலெ நடக்குற அக்குரமத்தையும் கவனிச்சி ஏதாச்சும் பண்ணுனார்னா தேவலே..வேளாங்கண்ணி எல்லாம் எந்தமாதிரி ஜோரா ஆயிடுச்சு கோயில் காசுலெ ' என்றார் ஒருத்தர். 'அ..சும்மாவா..கந்தூரிலெ பதினாலுநாளும் ஷரீபு இங்கேதானே சுத்திக்கிட்டிருந்தாரு... ஒரு காரியம் உடலையாமுல்லெ! உண்டியல் பிரிக்கும்போதெல்லாம் கூடத்தானே இருந்தாராம்...வெனைய வைப்பாரு பாருங்களேன்.. ' என்று ஒருவர் பதிலளித்தார். 'ஹபம் உடனுமே..வாங்க ' என்று மோதினாரை அழைத்துக் கொண்டு சின்னாப்பா உள்ளே போனார். 'இப்ப என்ன பண்ணுவாஹா ' என்றேன் ஹமீதிடம். 'குளிப்பாட்டுவாஹா ' என்றான். 'கசப்பு மாத்துறப்பதான் குளிப்பாட்டுனாஹலே ' என்று கேட்டேன். 'இல்லேடா.. 'மெளத் 'தாப் போனபிறகு அசுத்தம் வெளியாகுமில்ல..அதெ சுத்தப் படுத்துறதுதான் கசப்பு மாத்துறது...ஆனா இப்ப வந்து கலிமா சொல்லி குளிப்பாட்டி குழந்தைக்கு 'ஒலு ' எடுத்து ஒரு புது துணியை எடுத்து புள்ளையை போத்துவாங்க.. 'கஃபன் 'னா துணின்னு அர்த்தம் அரபிலே ' என்று விளக்கினான். நான் சற்றுநேரம் கழித்து உள்ளே போனேன். இதற்குள் ஹபம் விட்டு குழந்தையை தாழ்வாரத்தில் வைத்திருந்தார்கள்..இரண்டு ஊஞ்சல்களையும் எடுத்திருந்ததால் தாழ்வாரம் பெரிதாக இருந்தது. நான் பார்த்துக் கொண்டிருந்தேன்..லேசான அழுகை சுற்றிலும் கேட்டுக் கொண்டிருந்தது. பெரிய ஆளாயிருந்தால் அழுகை வீட்டில் பலமாக இருக்கும். இது சிறு பிள்ளைதானே..ஆனால் இதற்குத்தான் பலமாக அழவேண்டும் போலிருந்தது எனக்கு.. 'ஆபாப்பா..ஆபாப்பா ' என்று ஒரு குழந்தை அழுத அழுகை கேட்டது. இவன் எங்கே வந்தான் ? எப்படி இவ்வளவு நேரம் சும்மா இருந்தான் என்று சுற்றிலும் கவனித்தேன். இன்னாச்சி மடியில் உட்கார்ந்திருந்தான் 2 வயது ஹனீஃப் அக்தர். என்னவோ விபரீதம் நடக்கிறதென்று அவனுக்குப் பட்டிருக்க வேண்டும்.. 'ஆஹா பாப்பா ' என்று முன்னால் சொல்லிக் கொடுத்திருந்ததை 'ஆபாப்பா ஆபாப்பா ' என்று சொல்லி அடம் பிடித்தான். 'ஆஹா பாப்பா அல்லாட்ட பொய்டுச்சும்மா கண்ணு ' என்று இன்னாச்சி அழுது கொண்டே சொன்னபோது மற்ற பெண்களும் சற்று நேரம் வாய்விட்டு அழுதார்கள். 'இவனெ யாரு இங்கே கொண்டு வந்தா ? பெரிய 'அதாபு 'லெ கொடுப்பான்..யாரையாச்சும் புடுச்சி சந்து வீட்டுக்கு அனுப்புங்க ' என்று கலீல் எரிச்சலுடன் சொன்னதும் தாழ்வாரத்தில் ஓரமாய் நின்று கொண்டிருந்த வேலைக்காரி ராக்காயி அவனைத் தூக்கிக் கொண்டு போனாள்..

தாழ்வாரம் முழுக்க வெள்ளைத் துப்பட்டியணிந்த அணிந்த பெண்கள். துக்கம், கனமான வெள்ளைப் புகையால் குழந்தையைச் சுற்றி சூழ்ந்த மாதிரி இருந்தது. சந்தனத்துகளில் மல்லிகைப் பூவெல்லாம் கலந்து ஒரு கரைசல் ஒரு கிண்ணத்தில் இருந்தது. அதை சொந்தக்காரர்கள் ஒவ்வொருவரும் எடுத்து பிள்ளையின் நெஞ்சில் வைத்தார்கள். நானும் வைத்தேன். வைக்கும்போது குழந்தையைப் பார்த்தேன். சாவின் கறுப்பை பூசிக்கொண்டிருந்தபோதும் அது அழகாக இருந்தது. எனது கண்கள் நிறைந்தன. வெளியில் வந்தேன்.

சின்னாப்பா தன் மகனைப் பார்த்து 'குழி வெட்டியாச்சான்னு பாத்துட்டு வா ' என்று அனுப்பினார். அங்கே நின்றிருந்த சின்னத்தம்பி ஹாஜாவிடம் 'இந்தாடா..உள்ளக்க போயி ரெண்டு குச்சி எடுத்துட்டு வா ' என்றார். 'ஹபரு 'க்குப் தலைப்பக்கத்திலும் கால்பக்கத்திலும் வைப்பதற்கு எனத் தெரிந்தது. ஹாஜா கொஞ்ச நேரத்தில் இரண்டு விளக்கு மாற்றுக் குச்சிகளோடு வந்தான். சின்னாப்பா சிரித்தார். 'இதில்லேடா..போயி நல்ல உருண்டையா, கொஞ்சம் மொத்தமா...ரெண்டு சின்ன கட்டைடா... அட, கொல்லக்கிபோயி கொய்யாக்கொம்புலேந்து ரெண்டை ஒடையேன்..அதான் நல்லா மரம் ஏறுசியே ' என்றார். இந்தத் தடவை சரியாகத்தான் கொண்டு வந்தான். 'இதையும் வானாண்டுடுவாஹலோ ' என்கிற சந்தேகப் பார்வையுடன் சின்னாப்பா கையில் கொடுத்தான். 'அங்..இதேதான் ' என்றதும் ஓடிவிட்டான். ரொம்பநேரமாக இவன்தான் சைக்கிளில் அலைந்து கொண்டு இருக்கிறான் தைக்கால் தெரு, நூக்கடைத்தெரு என்று தெரிந்த வீட்டில் விஷயத்தைச் சொல்ல. குரங்குப் பெடலில் அவன் வேகமாக போவதைப் பார்க்கையில் பயமாயிருந்தது.

'என்னாப்பா..அப்ப மையத்தெ எடுத்துடலாமுல்லெ ? ' என்று என்னிடம் கேட்டுவிட்டு பதிலை எதிர்பாராமல் சின்னாப்பா மோதினாருடன் உள்ளே போனார். எல்லோரும் உள்ளே போனார்கள். சற்று நேரத்தில் சின்னாப்பா தன் கைகளில் , குழந்தையுள்ள மையத்துப் பெட்டியை இரு கைகளில் ஏந்திப் பிடித்தபடி வெளியில் வந்தார். முன்னாள், மோதினார் ஏதோ சொல்லிக் கொண்டே போக எல்லோரும் கலிமா சொன்னார்கள். மோதினார் ஒவ்வொரு வாக்கியம் சொல்லும்போதும் 'சஹாதா ' என்று முடியும். அவர் என்ன சொல்கிறார் என்பது நாலைந்து தடவை கேட்டபிறகு விளங்கிற்று..இதெல்லாம் எனக்கு மறந்து போயிருந்தது...இப்போது நினைவிற்கு வந்தது.. 'காலு இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஉன் கலிமா சஹாதா ' - இதையேதான் அவர் திருப்பித் திருப்பிச் சொன்னார். பின்னால் போனவர்கள் அவர் 'சஹாதா ' சொன்னதும் 'அஸ்ஹது அல்லயிலாஹா இல்லல்லாஹூ வ அஸ்ஹது அன்னமுஹம்மதுர் ரசூலுல்லா ' என்றார்கள். மைய்யத்து ஊர்வலம் வேகமாகப் போனது. மோதினாரின் வேகத்திற்கு பின்னால் மைய்யத்துப் பெட்டியை தூக்கிக் கொண்டு போகிறவர்கள் ஓட வேண்டியிருந்தது. சிறு பிள்ளையாதலால் தனி ஒருவர்தான் அந்த சின்னப் பெட்டியை கைகளில் ஏந்திச் செல்வார். பெரிய ஆளாக இருந்தால் நிறையபேர் தோளில் தாங்குவார்கள். அப்போது கொஞ்சம் மெதுவாகத்தான் போக முடியும். ஊர்வலத்தில் நான் பின்தங்கி இருந்தேன். ஹமீது கூடவே வந்து கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் மச்சான் கலீல் அதற்கப்புறம் தெருப்பையன்கள் என்று மாறி மாறி வாங்கி தூக்கிச் சென்றார்கள். கடைத்தெருவில் நுழைந்தோம். டூரிஸ்ட் பஸ்ஸில் வந்த நாலைந்து ஹிந்துக் குடும்பம் ஊர்வலத்தை வியப்பாய் வேடிக்கை பார்த்தது. பீர் மண்டபத்திற்குப் பக்கத்திலிருக்கும் மண்டபத்தின் நடுவில் மைய்யத்துப் பெட்டி வைக்கப்பட்டது. மண்டபத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் நகர்ந்து போனார்கள். ஹமீதிடம் 'ஜனாஸா தொழுகை இங்கேயா நடக்கும் ? பெரிய எஜமான் வாசலிலேயில்லெ ? ' என்று கேட்டேன். 'இங்கேயும் நடக்கிறது வழக்கந்தான் ' என்றான். 'ஒலு ' செய்யப்போயிருந்த சின்னாப்பா, மோதினார், தெருப்பையன் அஜ்மல் வந்தார்கள். சின்ன ஹொத்துவாப் பள்ளிக்கு அவர்கள் போயிருந்திருக்க வேண்டும் என்று பட்டது. மைய்யத்துப் பெட்டியை முன்வைத்து தொழுதார்கள். 'மனாரா 'வின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன். தொழுகை முடிந்ததும் மோதினார் 'ஃபாத்திஹா ' என்றார். நான் தொப்பி இல்லாமல் இருப்பது நிறையபேருக்கு உறுத்தியிருக்க வேண்டும். ஒரு மாதிரியாய் பார்த்தார்கள். 'ஒரு மரியாதைக்கி கைநேஞ்சியாச்சும் தலையிலெ போட்டிருக்கனும்..சரி, சலாம் கொடுக்கும்போது ஹமீதுட கைநேஞ்சியை வாங்கிக்கலாம் ' என்று நினைத்தேன். மைய்யத்துப் பெட்டியை பெரிய மைய்யத்தாங் கொல்லைக்கு கொண்டு சென்றார்கள். சின்ன மையத்தங் கொல்லைக்கு இதுவரை நான் எந்த மெளத்துக்கும் போனதேயில்லை. எனக்குத் தெரிந்து பெரிய மையத்தாங்கொல்லையில்தான் நிறைய பேரை அடக்கம் பன்ணினார்கள். சின்ன மையத்தாங்கொல்லை எப்படியிருக்கும்..எப்படி குண்டு போடுவார்கள் என்று பார்ப்பதற்காகவே ஒரு தடவை கந்தூரியின்போது பெரிய மினாராவில் ஏறிப் பார்த்தேன்..

ஏழெட்டு வருடங்களுக்குப்புறம் இந்த மையத்தாங் கொல்லையில் நுழைகிறேன். எனக்கு இறப்பின் முழு அர்த்தமும் நன்றாகத் தெரிந்து எங்கள் வீட்டில் ஏற்பட்ட முதல் இழப்பு இது. மையத்தாங்கொல்லை அப்போது பார்த்தாற்போல்தான் இப்போதும் இருந்தது. புதிதாய் உருவாகியிருந்த 'ஹபர் 'கள்..தரைதரையோடு தரையாகிப் போனவைகள்..இன்னும் மேலே ஊற்றிய தண்ணீரின் ஈரம் காயாதது..வதங்கிப் போய்விட்டிருந்த பாய் போன்ற மாலைகள்..ஒவ்வொருவரும் கடற்கரைக்குப் போவதுபோல் இங்கேயும் வரவேண்டும் என்று நினைத்தேன். சொல்ல, எழுத முடியாத என்னென்னமோ நினைப்புகள் வந்தன அங்கு எனக்கு.சின்னப் பிள்ளைகள் அங்கங்கே கிடக்கும் எலும்புத் துண்டுகளை, மண்டை ஓடுகளை பார்த்து பயந்து என்னென்னமோ பேசிக் கொண்டார்கள். சற்று துணிச்சலான மன்சூர் எலும்பு இடத்தை காலால் நிமிண்டி பார்த்தான். இங்கே கல்கட்டிடம் எதற்கு என்று புரியவில்லை. கல்லால் நிறைய ஹபர்கள் கட்டப்பட்டிருந்தன. ஓரிரண்டு ஹபர்களைச் சுற்ரி இரும்பு கேட்டும் போடப் பட்டிருந்தது! ஹமீது, மையத்தாங்கொல்லையின் தென் கோடியில் புதிதாக 3 அடி உயரத்திற்கு கட்டப்பட்டிருந்த ஒரு சலவைக்கல் 'ஹபர் 'ஐ உதட்டைப் பிதுக்கியபடி காண்பித்தான். 'கொஞ்ச நாளைக்கு முன்னாலே 'மெளத் 'தாப் போனாரே..தர்கா கலிஃபா. அவரோடையா ? ' என்றேன். 'இல்லே..இல்லே..அவரோடது அந்தப்பக்கத்திலெ இக்கிது...அந்தோல இக்கிதுல்லெ அதான்.. ' என்று ஒரு ஹபரை பக்கத்திலிருந்தவர் காண்பித்தார். 'பரவாயில்லெ..இவராவது மெளத்தாப்போன பொறவும் பந்தா காமிக்காமெ போனாரே - தர்காவிலெ பெரிய ஆளாயிருந்தும்.. ' என்று நான் பேசும்போதே 'உஹூங்..அவருக்குத்தான் இன்னும் நாற்பது முடியலியே..முடிஞ்சப்புறம் அந்த சலவெக்கல்லு ஹபரோட ரொம்ப அலஹா கட்டுவாஹா ' என்று இடைமறித்தார் அவர்.

குழந்தைக்க்காக வெட்டிய குழி வடக்கு தெற்காக இருந்தது. இடம் ஞாபகம் வைப்பதற்கு வசதியாக (ஹபரடி ஃபாத்திஹாவுக்கு) பக்கத்தில் ஒரு பெரிய வேப்பமரம் இருந்தது. மோதினார் ஃபாத்திஹா ஓதியபிறகு, சின்னாப்பா குழியில் நின்று கொண்டு பிள்ளையை வாங்கி 'பிஸ்மில்லாஹி அலாமில்லதி ரசூலில்லாஹி ' என்று சொல்லியவண்ணம் குழியில் வைத்தார். தலை கிப்லா பக்கமாய் சாய்ந்திருந்தது. ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சம் மண் எடுத்துத் தந்தார்கள். அதை வாங்கிக் குழந்தையின் வலது கன்னத்தின் அடியில் வைத்தார் சின்னாப்பா. நானும் மண் கொடுத்தேன். முன்னொரு தடவை சின்னப்பட்டனார் சக்கரப்பாவின் மெளத்தின்போது - அப்போது நான் சின்னப்பிள்ளை - மண்ணை குழியில் நிற்பவரிடம் (அப்போதும் சின்னப்பாதான் நின்றிருந்தார் ) கொடுப்பதற்கு பதிலாக உடல் மேலேயே கொட்டியது ஞாபகம் வந்தது. நின்றவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். 'பரவாயில்லெ..சின்னப்பையன்தானே ' என்று சின்னாப்பா சொன்னார் அப்போது. எல்லோரும் மண் எடுத்துக் கொடுத்து முடித்து சின்னாப்பா அதை வாங்கி சற்று உருண்டையாக்கி குழந்தையின் வலது கன்னத்தின் அடியில் வைத்து விட்டு நிமிர்ந்தபோது ஒரு சின்ன கை 'ம்..இந்தாங்க சின்னாப்பா ' என்று நீண்டது. கடைசித் தம்பி ஹாஜா. அழுது கொண்டே கொடுத்தான். அதையும் வாங்கி வைத்தார் சின்னாப்பா. கடைசியாய் குழந்தையின் முகத்தைப் பார்த்தேன். பிறந்த மூன்று நாளிலேயே ஒரு மிகப்பெரிய புதிரின் விடையைக் கண்டுவிட்ட சிரிப்பு உறைந்து போயிருந்தது முகத்தில் அழகாய்..ஹமீது என்னை தட்டி இழுத்து அணைத்துக் கொண்டான்.

பெட்டியை உடலின்மேல் கவிழ்த்தாற்போல் வைத்தார்கள். மோதினார் ஃபாத்திஹா ஓதி முடித்ததும் பெட்டி மேலே மண் தள்ளப் பட்டது. மிகச் சீக்கிரத்தில் ஒரு சின்ன ஹபர் உருவானது..தலைமாட்டிலும் கால்மாட்டிலும் இரு குச்சிகள் நடப்பட்டன. பாய் போன்ற மாலை ஹபரின் மேல் போர்த்தப் பட்டது. பின்பு மோதினார் ஓதிக் கொண்டே முன்று முறை தண்ணீர் ஊற்றினார். இவர் என்ன சொல்வார் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. அவருடைய கை ஹபரின் கீழ்ப்பக்கத்திலிருந்து புறப்பட்டு திரும்ப புறப்பட்ட இடத்திற்கு வரும்போது முதல் தடவை 'யா அய்யத்து ஹன் நப்ஸூல் முத்துமாயின்னா ' என்றார். அடுத்த முறை 'துர்ஜயீ இலா ரப்பிகீ ராலியத்தன் மர்லியா ' என்றார். கடைசி முறையின்போது 'ஃபத்குலி ஃபி இபாதி வதுகுலி ஜன்னதி ' என்றார். தன்ணீர் ஊற்றிவிட்டு 'ஃபாத்திஹா ' என்றதும் எல்லோரும் ஓதினார்கள். இந்த ஃபாத்திஹா எல்லாம் எனக்கு மறந்து போயிருந்தது. முணுமுணுத்தேன். ஆஸிஃபிற்கு அது கேட்டிருக்கும்... 'தண்ணீர் ஊற்றியபிறகு மோதினார் உட்கார்ந்தல்லவா ஏதோ ஓதுவார் ? ' என்று பழைய நினைப்பில் ஹமீதிடம் கேட்டேன். 'தல்கின் 'ஆ ? அது பெரிய ஆளுக்குத்தான்...இது பாலிக் ஆவாத புள்ளெதானே.. ' என்று பக்கத்தில் வந்து கொண்டிருந்த சின்னாப்பா சொன்னார்.

தர்கா வாசலில் ஒரு ஃபாத்திஹா ஓதி முடித்ததும் விரைவாக வீட்டு வாசலையடைந்தோம். மைய்யத்து அடையாளைத்தைப் பார்த்து விட்டு வழியில் அவரவர்கள் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். வீட்டு வாசலில் ஒரு ஃபாத்திஹா ஓதி முடித்தார்கள். மாமா, சின்னாப்பா, நான், தம்பி, மச்சான் என்று தனித்தனியாய் பிரிந்து நின்றோம்.சலாம் கொடுக்க ஒவ்வொருவராக வந்தார்கள்....

(முற்றும்)

குறிப்பு : சாரு நிவேதிதாவுக்கு ஆபிதீன் எழுதிய நீண்ட கடிதங்களில் ஒன்று இது. edit செய்யப்படாமல் அப்படியே - 'குழந்தை ' என்று பின்னர் ஆபிதீனால் பெயர் வைக்கப்பட்டு , - 'யாத்ரா ' சிற்றிதழில் (இதழ் எண் 34/35/36) 1982-ம் ஆண்டு வெளிவந்தது. 'ஆபிதீன் ' என்ற பெயரிலேயே அப்போது வந்ததை குறிப்பாகச் சொல்ல வேண்டும்!

Email : abedheen@yahoo.com

Web : http://abedheen.tripod.com/

அருஞ்சொற்பொருள்

மெளத் - இறப்பு

சபர் - வெளிநாடு போய் வருதல்

குமர்ரஹக்கு - கிண்டலாக ஆண்குறிக்கு சொல்வது

நோக்காடு - பிரசவ வலி

ஒத்தத்துப்பட்டி - துணையின்றி தனியாகப் போவது

ஹயாத் - வாழ்க்கை

சம்ஸின் - பயில்வான்

நிய்யத் - (நோன்பு பிடிப்பதற்காகச் சொல்லும்) வாய்மொழி உறுதி

திராவியா - நோன்பு காலத்தின் சிறப்புத் தொழுகை

சஹர்நேரம் - இரவு 1 மணியிலிருந்து பாங்கு சொல்லும் வரை உள்ள நேரம்

யான்ஸ் - அறை

மறப்பு - திரை

நாசுவத்தி - பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி

ஹயாவு - பெண்குறியை கிண்டலாகச் சொல்வது

லாத்தா - அக்கா

புர்ஹா - கன்னிப்பெண்கள் தங்களை மறைத்துக் கொள்ள அணியும் ஆடை

நானா - அண்ணன்

சாபு - இஸ்லாமியப் பாடங்களை சொல்லித் தருபவர்

ஜூஜ்ஜூ - அத்தியாயம்

வெடைத்தல் - கேலி பண்ணுதல்

குப்பி - தன் பால் சேர்க்கை

சாமத்தியம் - சம்பாத்தியம்

ஏசுதல் - திட்டுதல்

பாங்கு - நேரத்தை அறிவிப்பது

இகாமத் - கூட்டுத் தொழுகைக்கான அழைப்பு

ஹாலு - நிலைமை

ஹைர் - 'நல்லதே நடக்கட்டும் ' எனப் பொருள்படும்.

மோதினார் - ஈமக்கிரியைகள் செய்பவர்

காக்கா - அண்ணன்

கலிமா - இஸ்லாத்தின் ஐந்து கடமைகளுள் முதன்மையானது

ஒலு - புனித சுத்திகரிப்பு

அதாபு - தொந்தரவு

ஹபர் - புதைத்த இடத்திற்கு மேலெழும்பும் மண்மேடு

மையத்து - இறந்த உடல்

ஜனாஸா தொழுகை - இறந்தவருக்காக தொழுவது

ஹொத்துவா - தொழுகை

கைநேஞ்சி - கைக்குட்டை

சலாம் கொடுத்தல் - அடக்கம் பண்ணிவிட்டு வந்தபிறகு இறந்தவருடைய வீட்டு வாசலில் சொந்தக்காரர்களிடத்தில் கையோடு கை சேர்த்து 'சலவாத் ' சொல்லுதல் (சலவாத்- நபிகள் நாயகம் மீது புகழ் பாடுதல்)

தர்கா கலிஃபா - தர்காவில் நடக்கும் மதபூர்வமான சடங்குகளுக்குத் தலைமைஸ்தானம் வகிப்பவர்

ஹபரடி ஃபாத்திஹா - அடக்கஸ்தலத்தில் ஓதும் ஃபாத்திஹா

கிப்லா - மேற்கு திசை

பாலிக் - வயதுக்கு வருதல்

***
நன்றி: ஆபிதீன் பக்கங்கள்.

Wednesday, November 30, 2011

சாரு... நீங்கள் இத்தனைப் பெரிய நகைசுவைக்காரரா?

// இன்னும் சில நாட்களே உள்ளன.
-----------------------------------
அன்புள்ள சாரு நிவேதிதா,

இன்னும் சில நாட்களே நான் உயிரோடு இருப்பேன். டிசம்பர் 6 வரை நிச்சயம் இருக்க மாட்டேன். அதற்கு முன் எக்ஸைல் நாவலைப் படிக்க ஏதாவது வழி இருக்கிறதா, சொல்லுங்கள்…

மோகன் ராஜ்

அன்புள்ள மோகன் ராஜ்,

எனக்கு இதுவரை என் வாழ்நாளில் வந்த கடிதங்களிலேயே என்னை மிகவும் பாதித்த கடிதம் உங்களுடையதுதான்.

ஏன் நீங்கள் இப்படி எழுதி இருக்கிறீர்கள்? தங்கள் வயது என்ன? ஏதாவது அற்புதம் நிகழ்ந்து நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று நான் வணங்கும் அய்யப்பன், ஷீர்டி பாபா, சோட்டாணிக்கரை பகவதி அம்மன், என் குருநாதர் மஹந்த்தா ஆகியோரை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

எப்படி இருந்தாலும் பிரதி கைக்குக் கிடைத்ததும் உங்களிடம் சேர்ப்பிக்கிறேன். தங்களுக்கு நான் புத்தகத்தை எப்படி அனுப்பட்டும்? முகவரி தந்தால் நேரிலேயே வந்து தருகிறேன்.

எக்ஸைல் நாவலின் 376 பக்கத்தில் கீதையிலிருந்து ஒரு ஸ்லோகம் வருகிறது. அது :

நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:

ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம் (2:12)

இதன் பொருள்:

இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமல் போகவும் மாட்டோம். அதாவது, ஆன்மாவுக்கு அழிவில்லை.

(கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு செய்த உபதேசம்)//

***

//தேர்தல் நடப்பதற்கு முன்னதாக எல்லா பத்திரிகைகளும் திமுக வெல்லும் என்று சொல்லிக் கொண்டிருந்த போது திமுகவுக்கு 30 சீட்டுக்குள்தான் கிடைக்கும் என்று எழுதினேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்போது சொல்கிறேன்… இந்த முறை கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து விடும். எனக்கு இது எப்படித் தெரியும்? தியானத்தில் கிடைத்த செய்தி.

பின் குறிப்பு: இதற்கும் என்னுடைய அரசியல் கருத்துகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…

மேற்கண்ட பதிவை 12-ஆம் தேதி எழுதினேன். அப்போது பலரும் கிண்டல் செய்தார்கள். இப்போது 16 தினங்களில் நான் சொன்ன வாக்கு பலித்திருக்கிறது.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கும் என்று திருஷ்டியில் தெரிந்ததுமே வஸந்தி ஸ்டான்லிக்கு இது பற்றிக் குறுஞ்செய்தி அனுப்பினேன்.

தாந்த்ரீகமும் மாந்த்ரீகமும் சரியாகப் பின்பற்றப் பட்டால் நமது திருஷ்டி கூர்மையாகும் என்பதற்கு இது எனக்கு இன்னும் ஒரு சான்று.

குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே ஒருவர் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது நமது சட்டத்தில் இருக்கும் மிகப் பெரிய குறைபாடு. நாளையே அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் அவர் இதுவரை அனுபவித்த சிறைத் தண்டனைக்கும் அது அவருடைய வாழ்வில் ஏற்படுத்தும் துயரங்களுக்கும் யார் பொறுப்பு?

கனிமொழியை வரவேற்கிறேன். சிறையில் அவர் தியானம் கற்றுக் கொண்டார் என்று பத்திரிகைகளில் வாசித்தேன். அவர் அதை நிறுத்தி விடாமல் தொடர வேண்டும்…//

***

மேற்கண்ட
அடைப்புக் குறிக்குள் இருக்கும்
இரண்டு தகவல்களும்
சாருநிவேதிதா தனது
'சாரு ஆன்லையனில்'
24th மற்றும் 28th களில்
எழுதிய சங்கதிகள்.

அவர் என்னவோ...
சீரியஸாகத்தான் எழுதி இருக்கிறார்.
என்றாலும்,
சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

சரியாக சொன்னால்.....
இவ்வாண்டு
நான் ரசித்து சிரித்த
சிறந்த துணுக்கு இதுவாகத்தான் இருக்கும்.

இவரது
எழுத்துலக வெற்றிப் பயணம் என்பது
உற்ற நண்பன் ஒருவனை
மிகச் சரியாய்
வஞ்சித்ததில் இருந்து தொடங்குகிறது.

சாருவை
அதற்கு முன்னும்
அதற்குப் பின்னும்
நான் அறிவேன்.
ஆனாலும்
இந்த அளவுக்கு
என்னை அவர் சிரிக்க வைத்ததில்லை.

சாரு
நீங்கள் என்னென்னமோ எழுதுகின்றீர்கள்.
சரி.
ஏன் நீங்கள்
இப்படி
நகைச்சுவைத் துணுக்காய்
தொகுப்பொன்று எழுதக் கூடாது?

இப்பொழுதெல்லாம்
உங்கள் நண்பர்கள் யாரும்
தங்கள் எழுதி எழுத்துக்களைப் பத்திரப்படுத்த
உங்களிடம்
கொடுத்து வைப்பதில்லையா என்ன?
அதனால் என்ன...
விடுங்கள்.
கவலை வேண்டாம்.
நாளை ஒருவன்
அப்படி ஏமாறாமலாப் போவான்?

உங்களிடம் புத்தகம் கேட்டு
கடிதம் எழுதிய நண்பரை உடனே போய் பாருங்கள்.
அவரிடம் நீங்கள்
உங்களது புதிய புத்தகத்தை
சேர்ப்பிக்க....
அந்தச் சந்தோஷத்தில்
அவரது மூச்சே நின்றாலும் நின்றுவிடலாம்.
போய் பாருங்கள்.

அப்புறம்....
இன்றைக்கு ஜோஸிதத்திலும்
பின்னி எடுப்பவராக இருக்கின்றீர்கள்!!
நாளை..., திங்கள்கிழமை என்று
ஞாயிற்றுக்கிழமை அன்றே
மிகச் சரியாக சொல்லும்
பெரியதோர் ஞானம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது!!!
இப்படியே நீங்கள்
தொடர்ந்து பெயர் போடுவீர்களேயானால்
இந்தியாவே தேடும்
வல்லமைக் கொண்ட
நம்பர் ஒன்
காலக் கணிப்பாளராக
புகழ்ப்பட வாய்ப்பிருக்கிறது.
முயற்ச்சி செய்யுங்கள் சாரு.
வாழ்த்துக்கள்.

-தாஜ்